குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஆய்வு


குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில்  தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஆய்வு
x

குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஆய்வு நடத்தினர்.

நாமக்கல்

குமாரபாளையம்:

குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஆய்வு நடத்தினர்.

போக்குவரத்து தடை

கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வசித்த சுமார் 135 குடும்பங்களை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் காவிரியில் வெள்ளப்பெருக்கால் குமாரபாளையத்தில் உள்ள பழமையான பழைய பாலத்தில் போக்குவரத்துக்கு தடை போடப்பட்டது.

மேலும் தாழ்வான பகுதிகளில் தீயணைப்பு நிலையம் சார்பில் ரப்பர் டியூப்பில் மிதவை ஜாக்கெட்டுகள் மற்றும் கயிறுகள் ஆகியவைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நேற்று தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 22 வீரர்கள் குமாரபாளையம் வந்தனர்.

நீர்வரத்து குறைந்தது

அவர்கள் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் வாகனங்களில் சென்று தாழ்வான பகுதிகளான அண்ணா நகர், கலைமகள் தெரு, இந்திரா நகர், மணிமேகலை தெரு, மேட்டுக்காடு, சின்னப்பநாயக்கன்பாளையம், அங்காளம்மன் கோவில், காவிரி நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த வீடுகளை பார்வையிட்டனர். எனினும் நேற்று மாலை முதல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது.

இதேபோல் பள்ளிபாளையத்துக்கு நேற்று தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 40 பேர் வந்தனர். அவர்கள் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகள், தாழ்வான பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி தலைமையில் போலீசாரும் சென்றனர்.


Next Story