கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு
x

பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் அவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த மாதம் 30-ந்தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பேருந்து நிலையத்திலிருந்து போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் மற்றும் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் அவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்ததாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து முனையம் திறக்கப்பட்ட நாளிலிருந்து படிப்படியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்க முடியாது. அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகள் (SETC) இம்முனையத்திலிருந்து இயங்கி கொண்டு வருகிறது. பொங்கலுக்கு பிறகு, இம்முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னிப் பேருந்துகள் (Omni Buses) 24.01.2024 முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் (MTC) போதுமான அளவு தேவைக்கேற்ப இயக்கப்பட்டு வருகிறது.

இம்முனையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப இன்று மட்டும் சுமார் 4,000 நடைகள் (Trips) சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டன. இம்முனையத்தில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் சீரான நிலையில் இயக்குவதற்கும் மற்றும் பொது மக்களுக்கு எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் படிப்படியாக அனைத்து பேருந்துச் சேவைகளும் தொடர்வதற்கும் இக்கூட்டம் நடைபெற்றது.

இம்முனையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டிற்கும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பயணிகள் உதவி மையம், பயணிகளை ஏற்றி செல்லும் மின்கல ஊர்திகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக மின்கல ஊர்தி (Battery Vehicle for Differently-abled Persons), பயணிகள் பிரதான முனையத்திலிருந்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து முனையத்திற்கு சுலபமாக வருவதற்கு மாற்று பாதை (MTC Plaza) அமைக்கப்படுவது மற்றும் உணவகங்கள் போதுமான அளவில் உள்ளனவா என இன்று ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பயணிகளிடம் விசாரித்த போது, இம்முனையத்தில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன என்று தெரிவித்தனர். குறிப்பாக பயணிகளுக்கு ஆங்காங்கே பேருந்து வழித்தட நடைமேடை பலகை (Platform Destination Boards) போதுமான அளவில் வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் இம்முனையத்தில் பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை (Digital Signage Boards) வைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து முனையத்தை "பிளாஸ்டிக்- இல்லா முனையமாக" (Plastic-free Zone) செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story