செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
x

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

ஆய்வு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார்.அப்போது சுகாதாரமற்ற முறையில் இருந்த கழிவறையை ஆய்வு செய்தபோது கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தது. மேலும், போதிய வெளிச்சம் இல்லாமலும், ஒரு சில கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் துப்புரவு பணியாளர்களின் மேலாளர் சிலம்பரசனை அழைத்து இந்த வேலைக்கு நீங்கள் தகுதியில்லை, பணியில் இருந்து உடனே வெளியேறுங்கள் எனவும், நீங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என கடுமையாக எச்சரித்தார். இதன் தொடர்ச்சியாக தாய் சேய் நல பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆஸ்பத்திரி அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

மருந்துகள் இருப்பில் உள்ளது

இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி:-

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் அனைத்திலும், வார்டு, கழிவறைகள் உள்ளிட்டவை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும், தற்போது செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டேன், அப்போது நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டேன், இங்கு குடிநீர் வினியோகம் உள்ளது, ஆனால் அதனை மேம்படுத்த வேண்டும். போதிய அளவில் பெட்ஷீட்கள் உள்ளன. ஆஸ்பத்திரியில் பயன்படுத்தபடும் துணிகளை துவைப்பதற்கு 3-பெரிய எந்திரங்கள் உள்ளன. அதனை அதிக படுத்தும் திட்டமும் உள்ளது. சமையல் கூடத்தில் உணவுகள் தயாராக உள்ளன. ஆஸ்பத்திரியில் தொற்றுகள் இல்லாத பகுதியில் உணவுகளை வழங்குமாறு கூறி உள்ளேன். ஆஸ்பத்திரியில் எங்கெங்கே பாதிப்புகள் உள்ளதோ அதனை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளேன். தமிழகத்தில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் மருந்துகள் இருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story