நீர் சிக்கன முறைகளை பின்பற்றி குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்


நீர் சிக்கன முறைகளை பின்பற்றி குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
x

நீர் சிக்கன முறைகளை பின்பற்றி குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர்:

எளிதில் விதைப்பு

அரியலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் எக்ேடரில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் குறுவை சாகுபடி முழுவதும் நிலத்தடி நீரை நம்பியே செய்யப்படுகிறது. விவசாயிகள் நீர் சிக்கன முறைகளை பின்பற்றி குறுவை சாகுபடி செய்யலாம். விதை விதைக்கும் கருவி கொண்டு நேரடி நெல் விதைப்பு செய்வதில் நாற்றங்கால் தயாரிப்பு செலவு, விதை செலவு, நாற்று பறிப்பு, எடுத்து செல்லுதல், நடவு செலவு ஆகிய முறைகள் இல்லாததால் 1 ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவு மிச்சமாகும். எளிதில் விதைப்பு செய்யலாம்.

முக்கியமாக பயிர் அறுவடை 10 நாட்களுக்கு முன்னதாகவே வந்துவிடும். விதைப்பதற்கு முன்னர் வயலினை நன்கு உழுது சமன்படுத்தி களை இல்லாமல் அரை அங்குலம் அளவிற்கு தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நேரடி நெல் விதைப்பிற்கு விதைக்கும் கருவி மூலம் விதைக்க ஏக்கருக்கு 12 கிலோ விதை போதுமானது ஆகும்.

நீரை மிச்சப்படுத்தலாம்

எந்திர நடவு செய்வதன் மூலம் ஏக்கருக்கு 12 முதல் 15 கிலோ விதை போதுமானது. 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்றுகளை எந்திர நடவுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் 30-40 சதவீதம் வரை நீரை மிச்சப்படுத்தலாம். எந்திர நடவு பின்பற்றுவதால் நாள் ஒன்றுக்கு 5 ஏக்கர் வரை நடவு செய்யலாம். இதில் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்து 500 வரை செலவாகும்.

நெல் விதைகள் இருப்பில் உள்ளன

அரியலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் அம்பை-16 மற்றும் ஆடுதுறை-45, கோ-51 ஆகிய ரகங்கள் 18 டன் வேளாண்மை விரிவாக்க மையத்திலும் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் 80 டன் இருப்பு உள்ளது. உரங்கள் யூரியா 796 டன், டி.ஏ.பி. 5 ஆயிரத்து 158 டன், பொட்டாஷ் 515 டன், காம்ப்ளக்ஸ் 2 ஆயிரத்து 292 டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் நெல் நுண் சத்து 14 டன் திரவ உயிர் உரங்கள் 900 லிட்டர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மண்வளத்தை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உர விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story