பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்


பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

கணக்கீட்டை மறு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

ராமநாதபுரம்

தொண்டி,

கடும் வறட்சி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் முத்துராமு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு விவசாயிகள் ராமநாதபுரம் வருவாய் கோட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் மற்றும் பரமக்குடி வருவாய் கோட்டத்தில் வேளாண் காப்பீட்டு நிறுவனத்திலும் பயிர்காப்பீடு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. வைகையில் இருந்து கிடைத்த தண்ணீர் மூலம் சில பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி ஆங்காங்கே விளைச்சல் ஏற்பட்டது.

அரசு நிவாரணம்

மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியை கணக்கில் எடுத்து தமிழக அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என அரசுக்கு தொடர்ந்து விவசாயிகள் முறையீடு செய்த நிலையில் வருவாய்துறை, கலெக்டர், வேளாண்துறை நேரில் ஆய்வுசெய்து பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தங்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் தமிழக அரசு வறட்சியை ஏற்று இந்த மாவட்டத்திற்கு 132 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு செய்து விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.

தற்போது 2 காப்பீட்டு நிறுவனங்களும் இழப்பீட்டை அறிவித்துள்ளது. திருவாடானை தாலுகா மற்றும் ராமநாதபுரம் தாலுகா உள்ளடக்கிய ராமநாதபுரம் வருவாய் கோட்டத்தில் நெல் விவசாயம் அதிக பரப்பளவில் நடைபெற்றுள்ளது. வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளும் இவைகள் தான். தனியார் காப்பீட்டு நிறுவனம் மகசூல் மாதிரி கணக்கீட்டில் ஏதோ குழப்பம் நிகழ்ந்துள்ளது.

மறு ஆய்வு

எனவேதான் அதிக பரப்பளவை கொண்ட ராமநாதபுரம் வருவாய் கோட்டத்தில் 79 வருவாய் கிராமத்திற்கு இழப்பீடு மறுக்கப்பட்டு 38 கோடி ரூபாய் மட்டுமே தனியார் காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது. பரமக்குடி வருவாய் கோட்டத்திற்கு 200 கோடி ரூபாய் அரசு நிறுவனம் வழங்கியுள்ளது.

இதில் இருந்தே அந்நிறுவனம் நடத்திய அறுவடை சோதனையில் தவறுகள் நடந்துள்ளது தெரிகிறது. எனவே ஏற்கனவே கணக்கீடு செய்ததை மறுஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story