டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம் நடைபெற்று வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம் நடைபெற்று வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடுப்பு பணிகள்
பொள்ளாச்சி பகுதியில் கொரோனா தொற்றுக்கு இடையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், சீனிவாசன், செல்வம், செந்தில், மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் வீடு, வீடாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நோட்டீசு வழங்கப்படுகிறது. தண்ணீர் தொட்டிகளில் கிருமி நாசினி மருந்து ஊற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கிருமி நாசினி மருந்து
தொட்டிகளில் மழைநீரை தேக்கி வைப்பதால் டெங்கு காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசு உற்பத்தி யாக வாய்ப்பு உள்ளது. இந்த வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டும் முட்டையிட்டு, ஒரு வாரத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் கொசுக்களாக மாறி விடுகின்றன. அவை பகலில் மட்டும் கடிக்கும்.
எனவே வாரம் ஒரு முறை குடிநீர் தொட்டிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் தொட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், குளிர்பதன பெட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில், தேங்காய் சிரட்டை, பழைய டயர், ஆட்டுக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நோயின் அறிகுறிகள்
டெங்கு தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட 86 தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் மூலம் ஏ.டி.எஸ். கொசுப் புழு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் டெங்கு தடுப்பு பணிக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ரத்தத்தில் தட்டு அணுக்களின் எண்ணிக்கை விரைவாக குறைந்து உள் உறுப்புகளில் ரத்த கசிவு ஏற்படும். எனவே காய்ச்சல், வாந்தி, தோலில் தடிப்புகள், உடல்வலி மற்றும் மூட்டு வலி போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடன டியாக அரசு ஆஸ்பத்திரி, வடுகபாளையம், காமாட்சி நகர் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.