வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 Jun 2023 7:30 PM GMT (Updated: 9 Jun 2023 7:31 PM GMT)

நாளை மறுநாள்(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி கோவையில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்

கோவை

நாளை மறுநாள்(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி கோவையில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு கோவையில் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 83 அரசு மேல்நிலைப்பள்ளி, 116 அரசு உயர்நிலைப்பள்ளி, 232 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 781 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி என்று மொத்தம் 1,212 அரசு பள்ளிகள் உள்ளன.

சுத்தம் செய்யும் பணி

பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கோவை மாநகர பகுதி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் வகுப்பறை மற்றும் மைதானங்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வகுப்பறையில் படிந்து உள்ள தூசிகளை அகற்றி வருவதுடன், போர்டுகளை சுத்தம் செய்து வருகிறார்கள். அதுபோன்று விளையாட்டு மைதானங்களில் வளர்ந்து உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, குடிநீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அதிகாரிகள் ஆய்வு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகிறார்கள்.இதனால் அப்போதில் இருந்தே பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கிவிட்டது. தினமும் பள்ளிகள் திறந்து சுத்தம் செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதால் தற்போது அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story