போலீசார் விடிய விடிய தீவிர சோதனை


போலீசார் விடிய விடிய தீவிர சோதனை
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் விடிய விடிய தீவிர சோதனை

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீசார் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தினார்கள். மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் தங்கும் விடுதிகளில் யாரேனும் சந்தேகப்படும்படியாக தங்கியுள்ளனரா? என போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அதுமட்டுமின்றி குற்றம் அதிகம் நடைபெறும் இடங்களாக கருதப்படும் இடங்களில் பழைய குற்றவாளிகளின் நடமாட்டம், ரவுடிகளின் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவையும் கடந்து நேற்று காலை 6 மணி வரை விடிய, விடிய நடைபெற்றது.


Next Story