சிறை கைதிகளிடம் உறவினர்கள் பேச இன்டர்காம் வசதி


சிறை கைதிகளிடம் உறவினர்கள் பேச இன்டர்காம் வசதி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

சிறை கைதிகளிடம் உறவினர்கள் பேச இன்டர்காம் வசதி

கோயம்புத்தூர்

காந்திபுரம்

கோவை மத்திய சிறையில் கைதிகளிடம் உறவினர்கள் எளிதாக ேபசுவதற்கு தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது.

கோவை சிறையில் 2 ஆயிரம் கைதிகள்

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று மொத்தம் 2026 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேசவும், குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், தண்டனை கைதிகள் செவ்வாய், வியாழக்கிழமை பார்த்து பேசவும் அனுமதிக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு மனு அளித்து, அதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர்கள் பேச முடியும்.

சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில், 2 மீட்டர் தூரத்தில் நின்று பேசுவார்கள். வக்கீல்களும் இதேபோன்றுதான் பேசும் நிலைமை இருந்தது. வயதான கைதிகள், உறவினர்கள் பேசுவதை சரியாக புரிந்துகொள்ள முடியாதநிலை இருந்தது. மேலும் வயதான உறவினர்கள் இளம் கைதிகளிடம் பேசும்போதும் புரிந்து கொள்ள முடியாததால் சத்தம்போட்டு பேச வேண்டிய நிலையும் இருந்தது. கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் உத்தரவின்படி, சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, ஜெயிலர் சிவராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்டர்காம் வசதி

இருபக்கத்திலும் இன்டர்காம் வைத்து கைதிகளும், உறவினர்களும் எளிதில் பேச தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இந்த திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்தம் 8 இன்டர்காம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை சிறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை சிறையில் தினமும் 250 பேர் மனு போட்டு, கைதிகளிடம் பேசுவார்கள். இதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ்பூஜாரியிடம் ஆலோசனை பெற்று, இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கைதிகளும், உறவினர்களும் பேசுகிறார்கள். வரும் நாட்களில் வக்கீல்களும் இன்டர்காம் மூலம் கைதிகளுடன் பேச அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவை சிறையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இதற்கான நடவடிக்கையை சிறைத்துறை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story