சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்முயற்சிகள் மூலம் குடிமக்களிடையே ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட உணவின் ஒரு பகுதியாக சிறுதானிய உணவுகளை இணைப்பதை ஊக்குவித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை, வேளாண்மை துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட, நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், பள்ளி மாணவிகள் ஆகியோர் இணைந்து சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய இனிப்புகள் மற்றும் சிறுதானிய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் சார்பாக 15 வகையான சிறுதானிய வகை உணவு பொருட்களையும் மற்றும் 35 வகையான சிறுதானியங்களை காட்சிப்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 63 வகையான சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சிறுதானிய விதைகளை பார்வையிட்டார்.
மேலும் பள்ளிகளில் காலை வழிப்பாட்டு கூட்டத்தின் போது சிறுதானியத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உணவு இடைவேளையின் போது சிறுதானிய சிற்றுண்டிகள் உட்கொள்ளவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறுதானிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷ்னி, உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சையத் சுலைமான் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.