செல்போன் திருட்டில் ஈடுபட்டவடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர்

செல்போன் திருட்டில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர்
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டியை அடுத்துள்ள கரவழி மாதப்பூர் பகுதியில் தனியார் மில் நிறுவன தொழிலாளர்கள் தங்கும் அறையில் 5 செல்போன் திருட்டு போனதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு புகார் வந்தது.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதால் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி வழிகாட்டுதழின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து பணிமனை அருகே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 3 வடமாநில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சோந்த ஹேமந்த் குமார் மாலிக், பிரதாப் மாலிக் மற்றும் ராஜேஷ் மாலிக் என்பதும், இவர்கள் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கியிருக்கும் தொழிலாளர்களின் செல்போன்களை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 16 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.






