கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?


கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?
x
தினத்தந்தி 10 Nov 2022 6:45 PM GMT (Updated: 10 Nov 2022 6:46 PM GMT)

கொரோனா காலத்தில் கைகொடுத்த கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் பயன் தருவதாய் உள்ளதா? என்பது குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

கல்வி தொலைக்காட்சி

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டதுதான் கல்வி தொலைக்காட்சி. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி, இந்த கல்வி தொலைக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

முதலில் சில குறிப்பிட்ட பாடங்கள் மாணவ-மாணவிகளுக்கு வீடியோவாக பதிவிடப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில், கல்வி தொலைக்காட்சி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேருதவியாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைன் வாயிலாக தங்களது கற்றலை வலுப்படுத்தி வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு கல்வி தொலைக்காட்சி தான். அதன் வாயிலாகவும், கல்வித்துறையின் சீரிய முயற்சியாலும் மாணவர்களின் கற்றல் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தது.

செயல்பாடுகளில் மாற்றம்

ஆரம்பத்தில் 2 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் ஆசிரியர்களை கொண்டு வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டன. சனிக்கிழமைகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி வினாக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் இசை, மனநல ஆலோசனை உள்பட துணைக்கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்ததையும் பார்க்க முடிந்தது.

தொலைக்காட்சி வாயிலாக மட்டுமல்ல, அதில் ஒளிபரப்பாகும் வீடியோக்கள் கல்வித் தொலைக்காட்சி யூ-டியூப் வாயிலாக அதற்கு மறுநாள் பார்க்கும் வகையில் பதிவேற்றமும் செய்யப்பட்டன. கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காலம் வரை கல்வி தொலைக்காட்சி மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அதன்பின்னர், நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதும், கல்வி தொலைக்காட்சியின் செயல்பாடுகளில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டது.


பயனுள்ளதாக உள்ளதா?


அதன்படி, தற்போது கல்வி தொலைக்காட்சியில் கொரோனா காலத்தில் வெளியிடப்பட்டது போன்ற பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியிடுவது குறைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மாற்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடர்பான வீடியோக்களும், காலை மற்றும் மாலையில் வேலைவாய்ப்பு தொடர்பான வீடியோக்களும், இதை தவிர மற்ற நேரங்களில் பாடங்கள் குறித்த வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.


இதுதான் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகளாக இருக்கிறது. இருப்பினும், கல்வி தொலைக்காட்சி கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


இருந்தாலும் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? அதை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-


கல்வி தொலைக்காட்சியின் பயன்பாடு குறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-


பிளஸ்-2 மாணவி ராஜேஸ்வரி:- ஊரடங்கால் பள்ளிகளை திறக்காத போது கல்வி தொலைக்காட்சியை தினமும் பார்த்து பாடங்களை படித்தேன். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது பள்ளிக்கு செல்வதால் ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதை கவனித்து படிக்கிறேன். அதேபோல் விடுமுறை நாட்களில் கல்வி தொலைக்காட்சியை பார்த்து பாடங்களை குறிப்பெடுத்து கொள்கிறேன்.


6-ம் வகுப்பு மாணவன் சகின்:- வீட்டில் இருக்கும் போது கல்வி தொலைக்காட்சியை பார்ப்பேன். அதில் அனைத்து பாடங்களையும் தெளிவாக சொல்லி கொடுப்பார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை பார்த்து விட்டு, வீட்டில் வந்து கல்வி தொலைக்காட்சி பார்ப்பதால் மனதில் நன்றாக பதிந்து விடுகிறது.


பிளஸ்-2 மாணவி தாரண்யா:- கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பாடங்களை படித்தேன். அப்போது கல்வி தொலைக்காட்சியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை அடிக்கடி பார்ப்பேன். அதை பார்த்து குறிப்பெடுத்து பாடங்களை படித்தேன். தற்போது பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் அதை பார்த்து படித்து வருகிறேன். எனினும் வீட்டில் இருக்கும் நேரத்தில் கல்வி தொலைக்காட்சியை பார்த்து வருகிறேன். அதன்மூலம் பாடங்களை நினைவுபடுத்தி பார்க்க வசதியாக இருக்கிறது.


8-ம் வகுப்பு மாணவி லீலாவதி:- கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதன் மூலம் ஆசிரியர் கற்பிப்பது மட்டுமல்லாது கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பள்ளியிலும் பார்க்க அரசு கேபிள் இணைப்பு வழங்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story