சென்னை துறைமுகம் பகுதியில் 65 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை காலி செய்ய சொல்வது நியாயமா? - விஜயகாந்த்


சென்னை துறைமுகம் பகுதியில் 65 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை காலி செய்ய சொல்வது நியாயமா? - விஜயகாந்த்
x

சென்னை துறைமுகம் பகுதியில் 65 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை காலி செய்ய சொல்வது நியாயமா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சென்னை துறைமுகம் தொகுதி 59 வது வட்டத்தில் உள்ள காந்திநகர், இந்திரா காந்தி நகரில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 3000-க்கும் மேற்பட்ட மக்களை திடீரென காலி செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை துறைமுகம் தொகுதி 59 வது வட்டத்தில் உள்ளடங்கிய காந்தி நகர், இந்திர காந்தி நகரில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் வாழ்கின்ற பகுதி மத்திய பாதுகாப்பு துறைக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் சொந்தமானதாகும். எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த 10.05.2023, 22.05.2023 17.05.2023 மற்றும் ஆகிய தேதிகளில் ராணுவத்துறை மூலம் தனித்தனியாக அனைவருக்கும் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸில் இந்த இடம் பாதுகாப்பு துறைக்கு சொந்தமானது எனவும் உடனடியாக காலி செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 65 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை திடீரென காலி செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்?. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட இடத்தை நிலமாற்றம் செய்து அங்கேயே வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story