ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா?


ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா?
x

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா? என்பது பற்றி மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை

காகித பணம்

பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.

அதன்பின்னர், 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.

ரூபாய் நோட்டுகள்

இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி-உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.

இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில்தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.

லட்சுமி, விநாயகர் உருவப்படம்

இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-

ஏற்றுக்கொள்ள கூடிய அளவில்லை

மன்னர் கல்லூரி பொருளியல் துறை தலைவர் வேலு சுரேஷ்குமார்:- ''டாலருடன் இந்திய ரூபாயை ஒப்பிடும் போது டாலரின் மதிப்பு அதிகமாக தான் இருக்கும். ஏனெனில் அங்குள்ள வளர்ச்சிகளுக்கு ஏற்ப டாலரின் மதிப்பை அந்நாட்டின் வங்கி தீர்மானிக்கிறது. இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பை ரிசர்வ் வங்கி நிர்ணயிப்பது போல மற்ற நாடுகளின் பணமும் அவ்வாறு மதிப்பிடப்படுகிறது. இந்திய ரூபாய் நோட்டில் விநாயகர், லட்சுமி புகைப்படம் இருந்தால் நாடு வளம்பெறும் என கெஜ்ரிவால் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ள கூடிய அளவில்லை. அவர் இந்த கருத்தை உண்மையாக கூறினாரா? அல்லது நகைச்சுவைக்காக கூறியிருக்கிறாரா? என்பதை ஆராய வேண்டும்.

மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை ஆவார். அதனால் தான் ரூபாய் நோட்டுகளில் அவரது புகைப்படம் பொதுவானதாக இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு பகுதியில் இந்து கடவுள்களின் புகைப்படம் இடம்பெற்றால் டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் பணத்தின் மதிப்பு உயரும் என கூற முடியாது. பணத்தின் மதிப்பின் அளவிடப்படுவது வேறு வகையில், வெறும் புகைப்படத்தில் இல்லை'' என்றார்.

காந்தி படம் தொடர்ந்தால் சிறப்பு

பொன்னமராவதி தாலுகா மேலத் தானியத்தை சேர்ந்த சசிரேகா:- இந்தியா அனைத்து மத இன மக்களையும் உள்ளடக்கிய மதசார்பற்ற சிறப்பான நாடு. எனவே மதம் சார்ந்த பிள்ளையார், லெட்சுமி ஆகிய சுவாமி படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்க தேவையில்லை, ஏற்கனவே நாட்டுக்காக உழைத்த காந்தி படம் உள்ளது. அதுவே தொடர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.


அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தை

பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த கலந்தர் நைனா முகமது:-

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகர் படம் அச்சிடப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் இவ்வாறு கூற காரணம் வர இருக்கின்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இது போன்ற தேவையற்ற கருத்துக்களை கூறி ஒற்றுமையுடன் வாழும் மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் பிரிக்க நினைக்கின்றார். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். நம் இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த காந்தியடிகளின் புகைப்படம் மட்டுமே ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட வேண்டும். ஆகையால் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றார்.


Next Story