ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?-பொதுமக்கள் கருத்து


ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?-பொதுமக்கள் கருத்து
x

ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மின்கட்டணம்

'எத்தனை நாளா செல்கிறேன், கடைசி தேதி வரைக்கும் இருக்காதீங்கனு, ரீடிங் எடுத்த உடனேயே போய் பணத்தை கட்டுங்க, கட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே!'

'நம்ம வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட இன்றைக்குத்தான் கடைசி நாளு, சாயந்திரத்துக்கு உள்ள பணத்தை கட்டலைனா, பியூசை புடுங்கிட்டு போய்விடுவாங்க, பிறகு இருட்டுலதான் கிடக்கணும். புரியாத மனுஷனா இருக்கிறாரே!'

இப்படி பல இல்லங்களில் இல்லத்தரசிகள் கணவன்மார்களை கடிந்துகொள்வதைக் கேட்டு இருக்க முடியும்.

முன்பு எல்லாம் கரண்ட் பில் கட்டுவதாக இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்த்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பில் வந்தால் ஆன்லைனில் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் அதைப் பின்பற்றி வந்தனர்.

இதில் படித்த சிலர் எவ்வளவு ரூபாய் கரண்ட் பில் வந்தாலும் கவுண்ட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தப்படி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில் கட்டுபவர்கள் ஆன்லைனில்தான் கட்ட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியது. இதனையும் பலர் பின்பற்றி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது ரூ.1,000 பில் வந்தாலே ஆன்லைனில்தான் கட்டவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

இதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

'பேடிஎம்' வசதி தேவை

தமிழ்நாடு மின்சார வாரிய என்ஜினீயர் யூனியன் பொது பொருளாளர் கே.கல்யாணசுந்தரம் கூறும்போது, 'ஆன்லைன் மூலம் கரண்ட் பில் கட்டுவது என்பது ஒரு நல்ல திட்டம்தான். பொதுமக்கள் தேவை இல்லாமல் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. சர்வர் பிரச்சினை காரணமாக காலதாமதம் ஏற்பட்டால் அதற்காக தேவையில்லாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டியதில்லை. ஊழியர்களுக்கும் பொதுமக்கள் கட்டிய பணத்தை வங்கியில் செலுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளும் தவிர்க்கப்படும். நகரப்பகுதிகளில் இதற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் ஆன்லைன் என்றால் தேவை இல்லாமல் ஒரு முகவரை சந்திக்க வேண்டும். அவர்களுக்கு கரண்ட் பில்லுடன் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் ஏற்படும். அதேபோல், தனியார் வங்கிகளில் கடைசி தேதியில் பணத்தை செலுத்தும் போது, அது வாரியத்தின் கணக்கிற்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது. வாரிய அலுவலகத்தில் பணம் கட்டியதற்கான சான்று இல்லாததால், தேவையில்லாமல் மின்துண்டிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

கவுண்ட்டர்களில் ஏ.டி.எம். கார்டுகளை தேய்த்து பணம் பெறும் வசதி மட்டுமே இருக்கிறது. ஆனால் சாதாரண தள்ளுவண்டி இட்லி கடையில் இருப்பது போன்ற 'பேடிஎம்' போன்ற வசதிகள் இன்னும் வாரியத்திற்குள் வரவில்லை. கவுண்ட்டர்களில் ஊழியர்கள் தட்டுப்பாடால் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை, மாறாக சர்வர் பிரச்சினையால் காலதாமதம் ஏற்படும் போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே கவுண்ட்டர்களில் பேடிஎம் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டு வருவதுடன், சர்வர் மற்றும் இணையத்தள வசதிகளை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்கள் தானாகவே ஆன்லைனை தேடிச்சென்று விடுவார்கள்' என்றார்.

பணம் வசூலிக்க மின்கணக்கீட்டாளர்

நுகர்வோர் மன்றத்தின் (சிட்டிசன் கன்ஸ்யூமர் அன்ட் சிவிக் ஆக்ஸன் குரூப்) முதுநிலை ஆய்வாளர் கே.விஷ்ணு மோகன் ராவ் கூறும் போது, 'கவுண்ட்டர்களில் பணத்தை கையாள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் காசோலைகள் கையாள்வது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஆன்லைன் முறையில் கரண்ட் பில் கட்டும் முறை அறிவிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வாரியத்திற்கு உடனடியாக பணம் கிடைக்க வேண்டும் என்றால் ஆன்லைன் என்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் இந்த முறை நகரப்பகுதிகளில் அமல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பாமரமக்கள் என பலதரப்பட்ட மின்சார நுகர்வோர்களால் ஆன்லைனில் பணம் செலுத்த வாய்ப்பு இல்லை. அதேபோல் மூத்த குடிமக்களாலும் ஆன்லைனில் பணம் செலுத்த முடியாது என்பதால் அவர்கள் பிறரை நாடிச் செல்ல வேண்டியிருக்கும். இவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மின்சாரம் கணக்கிட வருபவர்களையே பணம் வசூலிக்கவும் அறிவுறுத்தலாம்' என்றார்.

நடுத்தர மக்கள் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் டீக்கடை வைத்திருக்கும் செல்வம்:- எங்களைப் போன்று நடுத்தர மக்கள் பழைய முறையில் 15-ந் தேதிக்குள் மின்சார கட்டணம் கட்ட வேண்டும் மேலும் 2 மாதத்துக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் இப்போதுள்ள புதிய முறைகள் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். மேலும் ஆன்லைனில் கட்ட வேண்டும் என்பது தனிநபர் சம்பாதிப்பதற்கு வழிவகுக்கும். இதனால் எங்களைப் போன்ற ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரத்தை சேர்ந்த லோகநாதன்:- 1,000 ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இது கிராமப்புற மக்களை பெரிதும் பாதிக்கும். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும், இன்னும் கிராமப்புறங்களில் மக்கள் சாதாரண செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களால் எப்படி ஆன்லைன் முறையில் பணம் செலுத்த முடியும்.

இதுகுறித்து மின்வாரியம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் முறையில் பணம் செலுத்துவதில் ஏதேனும் தவறு நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்க முடியும். கிராம பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரடையாக சென்று பணம் செலுத்தி பழகி விட்டனர். இதனை மாற்றுவது கடினம். எனவே மின்வாரியம் மின்கட்டணம் குறிக்கும் போதே கட்டணத்தை வசூல் செய்து கொண்டால் கூட நன்றாக இருக்கும். பொதுமக்களை பாதிக்கும் இந்த முடிவை மின்வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எல்லாம் இன்று டிஜிட்டல் மயம் ஆகிவிட்டது. அதனால் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும். உடனே இவ்வாறு செய்யும் முடிவை கைவிட வேண்டும்.

திருப்பத்தூரை சேர்ந்த விக்னேஷ்:- இன்று பெரும்பாலான வீடுகளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வருகிறது. இதனால் அனைவரும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ரூ.1,000-க்கு மேல் வரும் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலமே கட்ட வேண்டும் என மின்வாரியம் கூறுவது ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக கிராமபகுதி மக்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த தெரியாது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் இதனை மின்வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கிராமப்புற மக்களுக்காக வழக்கம் போல் மின்வாரிய அலுவலகத்திலேயே பணம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது குறித்து கிராமங்கள் தோறும் மின்வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னரே நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்

வாபஸ் பெறவேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை சேர்ந்த விவசாயி பார்த்திபன்:- மின் கட்டண தொகையை ஆன்லைனில் செலுத்துவதால் நேரம் மீதமாகிறது. மின் அலுவலகத்திற்கு சென்று வரிசையில் நின்று மின் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் சரியான சில்லறை கொண்டு வர வேண்டும் என மின் ஊழியர்கள் கூறுவதால் வாக்குவாதமும் ஏற்படுகிறது. காலத்திற்கு ஏற்றார்போல் படித்தவர்கள் செல்போனில் 'கூகுள் பே' மூலமாக ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துகிறார்கள். தற்போது ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாய மக்கள் சாதாரண செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள் அவர்களால் ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்த இயலாது. விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு நேரடியாக சென்று மின் கட்டணம் செலுத்துவது தான் வசதியாக உள்ளது. ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்துவதை கட்டாயமாக்கினால் பாமர மக்களுக்கு சிரமம் ஏற்படும்.

காவேரிப்பாக்கம் அருகே உள்ள சிறுவளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுபாஷ்: தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இதில் ஆன்லைன் பண பரிவர்த்தனை பற்றி விவசாயிகளுக்கு பெரும்பாலும் தெரியாது. கிராம பகுதியில் அதிகமாக இ-சேவை மையம் இல்லாததால் மின் கட்டணம் செலுத்துவது மிகவும் சிரமமான ஒன்றாகும். விவசாயிகள் பண பரிவர்த்தனையை அதிக அளவில் ஆன்லைனில் மேற்கொள்வதில்லை. எனவே ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் இருந்தால் ஆன்லைனில் செலுத்தும் முறையை அரசு உடனே வாபஸ் பெறவேண்டும்.

விழிப்புணர்வு தேவை

வந்தவாசி தாலுகா மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பு.திருவேங்கடம்:- மின்சார கட்டணத்தை நேரடியாக மின்சார அலுவலகத்தில் சென்று செலுத்துவது பெரிய சிரமமாக இருக்கிறது. மாத கடைசியில் மின் கட்டணம் கட்ட செலுத்த சென்றால் பெரிய அளவில் மக்கள் கூட்டமாக இருக்கும். இதற்கு மாறாக கூட்டத்தை தவிர்க்க தான் ஆன்லைனில் கட்டுவது வசதியாக உள்ளது. ஆனால் அதிலும் சிக்கல் இருக்கிறது. சில காரணங்களால், தேதி காலம் முடிந்த பின்னர் ஆன்லைன் கட்டணம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கட்டணம் செலுத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் அலுவலகத்துக்கு நேரில் சென்றால் தான் அபராதத்தை செலுத்த முடியும். ஆன்லைனில் அபராதம் செலுத்த முடியாது.

படிக்காத பாமர மக்களுக்கு ஆன்லைன் கட்டணம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன்கள் அடிக்கடி சர்வர் சிக்கல், சிக்னல் சிக்கல் ஏற்படுவதால் குறித்த நேரத்தில் பணம் செலுத்த சிரமமாக உள்ளது. எனினும் அனைத்து கட்டணங்களும் ஆன்லைனிலேயே கட்டினால் சிரமம் ஏதும் இருக்காது என்பது எனது கருத்து.

சிரமம்தான்

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த குடும்பதலைவி மணிமாலினி:- அரசின் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகிறது. அதன்படி மின்வாரிய துறையும் பொதுமக்களின் நேரத்தையும், துறையின் நடைமுறைகளையும் எளிமைப்படுத்தும் விதமாக மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்கான இந்த நடைமுறையை கொண்டுவந்துள்ளது. தற்போது அனைத்து கடைகளிலும் காகிதமில்லா பணப்பரிவர்த்தனையை பலர் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த மின்கட்டணத்தை செலுத்துவதில் பிரச்சினை இருக்காது. ஆனால் சமீபத்திய ஆய்வின்படி 52 சதவீதத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் கிராமங்களில் உள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் மற்றும் இணைய பரிவர்த்தனைகள் பற்றி அறியாதவராக உள்ளனர்.

அவர்கள் ஆன்லைன் முறையில் மின்கட்டணம் செலுத்துவது சிரமம் தான்.மேலும் அக்கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் போது கமிஷனாக கூடுதலாக சில ரூபாய் கட்டணங்களை செலுத்த வேண்டி உள்ளது.

இது நடுத்தர மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த கூடும்.

இச்சிரமத்தை போக்கும் விதமாக ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் இன்றி செலுத்தும் வசதி ஏற்படுத்தி தரும் பட்சத்தில் இத்திட்டம் அனைத்து தரப்பு மக்களைஎளிதில் சென்றடையும்.

தொலைநோக்கில் பார்க்கும் போது அரசின் இந்த திட்டம் அவசியமானது.

எல்லாம் மாறிவிட்டது

காட்பாடி வஞ்சூர் கிராமத்தை சேர்ந்த இல்லத்தரசி நுனித வள்ளி வசந்த்:- மின் கட்டணம் கட்ட முன்பெல்லாம் மின்சார அலுவலகத்துக்கு சென்று வரிசையில் நின்று மின்கட்டணம் கட்டுவோம். ஆனால் இப்போது மாறிவிட்டது. இப்போது எல்லாம் செல்போனிலிருந்து 'போன் பே' மற்றும் கூகுள் பே மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

அரசு தற்போது ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் மின் உபயோகிப்பாளர்கள் ஆன்லைன் மூலம் பணம் கட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது நல்ல திட்டம் தான். அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. செல்போனில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் கட்டலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story