மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா?-பொது சுகாதார இயக்குனர்- பொதுமக்கள் கருத்து


மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா?-பொது சுகாதார இயக்குனர்- பொதுமக்கள் கருத்து
x

மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா? என்பது குறித்து பொது சுகாதார இயக்குனர் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம்

கொரோனா நோய்க் கிருமி அழிவே இல்லை என்பது போல் உருமாறிப் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் ஓலமிட்டது

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நோய்த் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அழையா விருந்தாளியாக அனைத்து நாடுகளிலும் ஊடுருவி சமூகப் பரவலாக மாறியது. உலகமே ஓலமிட்டு அழும் வகையில் அந்த கொடிய நோய் தொற்றுக்கு சுமார் 45 லட்சம் பேர் உயிர் இழந்தனர். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலும் அதன் பீதி அனைவரையும் தொற்றி இருந்தது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டன.

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட உடன் கொரோனா தொற்று பரவலின் வேகத்துக்கும், வீரியத்துக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. அதனால் நோய் பற்றிய அச்சம் மக்கள் மனதில் மெல்ல, மெல்ல விலகியது. நாளடைவில் கொரோனா வைரசை சாதாரண காய்ச்சல் போன்று மக்கள் கருதத் தொடங்கினர். எனவே முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டன.

புது வடிவம்

கொரோனா கிருமி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஓமைக்ரான் என புதுப் புது வடிவில் உருமாறி அச்சுறுத்தினாலும் மக்கள் கவலை கொள்வதாக இல்லை. இந்த நிலையில் கொரோனா கிருமியை உலகிற்கு அறிமுகம் செய்த சீனாவில் 'ஓமைக்ரான் பி.எப்.7' என்ற வடிவில் கொரோனா புதிய உருவம் எடுத்துள்ளது.

இந்த நோய்க் கிருமி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஊடுருவிவிட்டது. வீரியமான கொரோனா தொற்று போன்று இந்தக் கிருமியும் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகச் சுகாதார அமைப்பும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

அவசர ஆலோசனை

இந்த நிலையில் இந்தியாவில் 'ஓமைக்ரான் பி.எப்.7' என்ற புதிய வகை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார். தமிழ்நாட்டிலும் இந்த நோய் கிருமி நுழைந்து விடாது தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இது பற்றிய மருத்துவ நிபுணர், பொதுமக்களின் பார்வை வருமாறு:-

மருத்துவ இயக்குனர்

தமிழக அரசின் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம்:-

கொரோனா தொற்று பற்றி அச்சம் கொள்ளாமல் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஓமைக்ரான் பி.எப்.5 கிருமி பரவியது. அதனை நாம் எளிதில் கடந்து வந்துவிட்டோம். தற்போது ஓமைக்ரான் பி.எப்.7 கிருமி பரவுகிறது. இந்த வைரஸ் கிருமி பரவல் வேகம்தான் அதிகம் இருக்கிறது. பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் 96 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. இதனால் புதிய வகை கொரோனா பரவலை பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை.

அதே நேரத்தில் இன்னும் கொரோனா கிருமி முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்கு செல்வதை முதியோர்கள் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதேப் போன்று சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். பண்டிகை காலங்கள் வருவதால் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது நல்லது. முகக் கவசம் கொரோனா பரவலில் இருந்து மட்டுமல்ல காற்றில் பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.

பாதுகாப்பாக இருப்பது அவசியம்

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பூபதி:-

புதுவகை கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் வேளையில் அரசு உத்தரவிட்டால்தான் முகக் கவசம் அணிவோம் என்ற மனநிலையில் மக்கள் இருக்கக் கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியம். தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதை மக்கள் தாமாகவே தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கொரோனா ஏற்படுத்திய இன்னல்கள், துயரங்களை மக்கள் நினைவுக்கூர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இருந்தால் உடனடியாக தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கடந்த கால நிகழ்வுகளை யாரும் மறந்துவிட முடியாது. எனவே, பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்காமல் மத்திய, மாநில அரசுகள் கூறும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது

சேலத்தை சேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் சித்துராஜ்:-

புதிய ரக கொரோனா தொற்று வலுவான திறன் கொண்டதாக கூறப்படுகிறது. மிக குறுகிய காலநேரத்தில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவகூடியது. ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் மீண்டும் இதே தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து 10 அல்லது 19 பேர் புதிதாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல் வலி, சோர்வு மற்றும் நிமோனியா ஆகியவை அடிப்படை அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் விரைவில் டாக்டரை அணுக வேண்டும். முககவசம் அணிவது அவசியம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. தடுப்பூசி சிக்கல்களுக்கு பயந்து இன்னும் பலர் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். எனவே, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. குறிப்பாக உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் ஆலோசனை கேட்டு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

முககவசம் அவசியம்

தேவூரை சேர்ந்த சமூக ஆர்வலர் லட்சுமணன்:-

இனிவரும் காலங்களில் பி.எப்.-7 புதிய வகை கொரோனா மட்டுமின்றி பல்வேறு வகையான நோய்கள் பரவி பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்படும். இதனை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் உணவு வகைகளை தேர்வு செய்து உட்கொள்ள வேண்டும். மேலும், சுய கட்டுப்பாடுடன் முககவசம், கையுறைகள் அணிந்து போதுமான இடைவெளி விட்டு வெளியே சென்று வந்ததும் கை, கால்களை சுத்தம் செய்வதை வழக்கமாக இருக்க வேண்டும். அதோடு, அரசாங்கம் சொல்லும் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டை போல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் அனைத்து தரப்பு மக்களும் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதற்கு வழிவகுக்க கூடாது. முடிந்தவரை அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி மங்களம் ராஜா:-

கோரோனா என்ற பெயரை கேட்டாலே உயிர்பயம் வந்துவிடுகிறது. ஏற்கனவே கொரோனாவுக்கு நாம் பல உயிர்களை இழந்துவிட்டோம். அதுபோன்ற மீண்டும் ஒரு நிலை வராது என்று நம்புகிறேன். ஏனென்றால் தடுப்பூசிகள் செலுத்தி இருப்பதால் தன்னம்பிக்கையுடன் இந்த நோயை எதிர்கொள்ளலாம். எனவே புதிய வகை கிருமி எப்படி உருமாறி வந்தாலும் கவலைப்படத் தேவை இல்லை. ஆரோக்கியமான உணவு வகைகளை தினமும் எடுத்துக் கொண்டாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொரோனா போன்ற எந்த நோயும் எளிதில் தாக்காது. இதுபற்றி பீதி அடைவதுதான் உடல்நலத்துக்கு கேடாக அமையும். கட்டுப்பாடுகள் மீண்டும் தேவையற்றது. கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையானால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை, வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கொரோனா பாதிப்பு ஒரு பார்வை...

இந்தியாவில் இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு 5 லட்சத்து 30 ஆயிரத்து 681 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசிகள் வந்த பின்னர் கொரோனா கொட்டம் அடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள், 15-18, 12-14 வயது உள்ளவர்கள் என பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் என 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 220 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 178 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 21.12.2022 அன்றைய நிலவரப்படி இந்தியாவில் 3 ஆயிரத்து 402 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

தமிழ்நாடு

தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 35 லட்சத்து 94 ஆயிரத்து 328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12 கோடியே 74 லட்சத்து 16 ஆயிரத்து 815 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 21.12.2022 அன்று நிலவரப்படி 45 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லை என்பதும் கவனித்தக்கது.



Next Story