மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?


மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?
x
தினத்தந்தி 15 Dec 2022 7:00 PM GMT (Updated: 15 Dec 2022 7:00 PM GMT)

புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

"என்னிடம் நீ தலைகுனிந்து படித்தால், உன்னை தலைநிமிரச் செய்வேன்'', இதுதான் நூலகம் நமக்குச் சொல்லும் அறிவுரை.

வாசிக்கும் பழக்கம்

புத்தகங்களை படிக்கும் பழக்கம் இருந்தால், சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் தன்னாலே வரும். சிந்தனைகள் நிரம்பிய பெட்டகமாக இருக்கும் புத்தகங்கள் பலருக்கு, பலவிதமான சிந்தனைகளை தூண்டுகின்றன. அந்த சிந்தனைதான் ஒரு மனிதனை பல்வேறு இடங்களில் உயர்த்தி பிடிக்கின்றன.

அற்புதம் நிறைந்த புத்தகங்களை நூலகங்களுக்கு போய் வாசிக்கும் பழக்கம் சமீபகாலமாக அருகி வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு தூபமிடுகிறது. இருப்பினும் வாசிப்பை நேசிப்பவர்கள், இன்றும் நூலகத்தை நோக்கி நடைபோட்டு, புத்தகங்களை தேடிதேடிப் படிக்கத்தான் செய்கின்றனர். புத்தக கண்காட்சிகளில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கவும் செய்கிறார்கள்.

நூலக வகுப்பு

குழந்தைப் பருவம் முதல் புத்தக வாசிப்புத் திறனை ஏற்படுத்த, பள்ளிக்கூட கல்வியில் இருந்தே ஊக்கப்படுத்தப்படுகிறது.

அதற்காக பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்தில் 40 பாட வகுப்புகளில், புத்தகங்களைத் தேடிப் படிப்பதற்காக ஒரு பாடவகுப்பு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகுப்புகளில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவியல், தனிமனிதர்கள், சிந்தனைகளை தூண்டும் புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதை படிக்க வைத்து, அதன் வாயிலாக வினாக்கள் கேட்டு விடையளிப்பது, கலந்துரையாடுவது போன்றவை நடத்தப்படுகின்றன. இதுதவிர போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களை உத்வேகப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்திலும் இந்த நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு படிக்கிறார்களா? நூலகப் பாடவகுப்புகள் பள்ளிக்கூடங்களில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது இருக்கிறது.

பல பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் கண்காட்சியாகவே இருக்கின்றன என்ற புகார்களும் வருகின்றன.

புத்தக வாசிப்பு அவசியம்

பள்ளிகளைப் போன்று, கல்லூரிகளில் இதற்கென்று தனிவகுப்புகள் இல்லாவிட்டாலும், கல்லூரி வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் பொது நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த நூலகங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை செலவிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதில் நேரத்தை செலவிடும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. செல்போன் மோகம், அவர்களை அதில் மூழ்கடித்துவிட்டதால், நூலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தேடி படிக்கும் ஆர்வம் இல்லாமலே போய்விட்டது. இதனை மாற்ற வேண்டும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.

அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

30 ஆயிரம் புத்தகங்கள்

கோபிநாத் (தலைமை ஆசிரியர், அரசு பள்ளி, பெரியகுளம்) :- எங்கள் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழமையான நூலகம் உள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 5 மொழிகளில் புத்தகங்கள் உள்ளன. நூலகத்தை பராமரிக்க பதிவுறு எழுத்தர் பணியில் உள்ளார். புத்தகம் வாசிப்பு குறித்து மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பூங்கொத்து என்ற பெயரில் மாணவர்களிடம் புத்தகங்கள் கொடுத்து வாசிக்க வைக்கிறோம். மேலும் வகுப்பறைக்கு வெளியே என்ற நிகழ்ச்சியின் மூலம், மாலை நேரத்தில் புத்தகம் வாசிப்பு இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். வாசித்த புத்தகங்களில் இருந்து கதை சொல்லுதல், கவிதை வாசித்தல், ஓவியம் வரைதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் படைப்புகளை விரைவில் புத்தக வடிவில் வெளியிடவும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இந்த நூலகத்துக்கு போதிய இடவசதி இல்லை. பள்ளி வளாகத்தில் தனியாக ஒரு நூலகம் அமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

கிஷோர் (10-ம் வகுப்பு மாணவர், பெரியகுளம்) :- எங்கள் பள்ளியில் நூலகம் சிறப்பாக செயல்படுகிறது. நூலகத்துக்கு தினமும் மாணவர்கள் ஆர்வத்துடன் சென்று வாசித்து வருகிறோம். வாசித்த புத்தகங்களின் கருத்துகளை சக மாணவர்களோடு கலந்துரையாடுகிறோம். தமிழை உள்ளார்ந்து படிக்க உதவியாக உள்ளது. வகுப்பறைக்கு வெளியே பல தகவல்களை கற்றுக் கொள்ளவும், அறிவை வளர்க்கவும் இந்த வாசிப்பு பழக்கம் உதவுகிறது. கவிதை, கட்டுரை போட்டிகளில் பங்கேற்கவும் நூலகம் உதவுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகம் கொடுத்து படிக்கச் சொல்கிறார்கள். சனிக்கிழமை அதில் இருந்து ஆசிரியர்கள் கேள்வி கேட்பார்கள். இதன் மூலம் வாசிப்புத்திறன் மேம்பட்டு வருகிறது.

குறைந்த வாசிப்பு பழக்கம்

சிந்தன் (கல்லூரி நூலகர், தேனி) :- இன்றைய மாணவர்கள் மத்தியில் நூலகத்துக்கு சென்று புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. வாசிப்பு திறனை அதிகரிக்க பள்ளிகளில் நூலக வகுப்பு உள்ளது. ஆனால், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் பள்ளிகள், நூலக வகுப்பை சரியாக பயன்படுத்துவது இல்லை. மாணவர்களும் பள்ளிகளில் வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்வது இல்லை. கல்லூரிகளில் 100 மாணவர்களில் 10 பேர் தான் நூலகத்தை பயன்படுத்துகின்றனர். நூலக பயன்பாட்டை ஊக்குவிக்க மாணவர்களை கொண்ட வாசிப்பு குழு அமைத்து, நூலகம் சார்ந்த போட்டிகள் நடத்தி வருகிறோம். நூலகத்தை அதிகம் பயன்படுத்தும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறோம். பள்ளி அளவில் நூலகங்களுக்கு சென்று புத்தகம் வாசிப்பு பழக்கத்தை கட்டாயமாக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகள் நூலகங்களுக்கு செல்வதை ஊக்குவிக்க வேண்டும். பொது நூலகங்களை மேம்படுத்த வேண்டும்.

கார்த்திகா (கல்லூரி மாணவி, சின்னமனூர்) :- நான் கோட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறேன். கல்லூரியில் உள்ள நூலகத்தில் பாடம் சார்ந்தும், இதர புத்தகங்களும் அதிக அளவில் உள்ளது. பெரும்பாலும் பாடம் சார்ந்த புத்தகங்களையே மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வரலாறு, கலை, இலக்கியம், நாவல் போன்ற இதர புத்தகங்களை வாசிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பள்ளி அளவில் பார்த்தால் பல அரசு பள்ளிகளில் நூலகங்கள் இருந்தும் பயன்பாடு இன்றி உள்ளன. நான் எனது பள்ளிப் பருவத்தில் பள்ளி நூலகத்தை பயன்படுத்த வாய்ப்பு அமையவில்லை. நூலக வகுப்புகள் இருந்தும் அதை இதர பாடங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் நிலையே உள்ளது. இதனால், பள்ளி அளவில் வாசிப்பு பழக்கம் குறைகிறது. எனவே, வாசிப்பை கட்டாய வகுப்பாக்க வேண்டும். நூலக வகுப்புகளை இதர வகுப்புகளுக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சவால்

பொதுநூலக இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இளம்பகவத் கூறுகையில், ' புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை போட்டி மூலம் தேர்வு செய்து, அவர்களை தேசிய அளவில், சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் அழைத்து செல்கிறோம். அரசு புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தக வாசிப்பு ஆர்வம் சற்று மேம்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், இந்த பணியை திறம்பட கொண்டு செல்வது ஒரு சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. டிஜிட்டல் மூலம் பார்ப்பது சுலபம். ஆனால் அதிலும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அரசின் வாசிப்பு இயக்கம் தொடர் நிகழ்வாக இருக்கும்' என்றார்.

மாணவர்கள் போகாத இடம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது,'பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போகாத ஒரு இடமாக நூலகம் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை சற்று மாறி இருக்கிறது. மாணவர்களுக்கு புத்தக வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், நூலகங்களில் தேவையான புத்தகங்களை வாங்கி வைக்கவும் கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் நூலகங்களில் புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன. நூலகங்களை நிர்வகிக்க நூலகர் என்ற பதவி கிடையாது. அதற்கென்று ஒரு ஆசிரியருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவர் கற்பித்தல் பணியோடு சேர்த்து இதை மேற்கொள்கிறார். எனவே இதற்கென்று தனியாக ஒருவரை நியமித்தால் புத்தக வாசிப்பு, மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்த முடியும்' என்றார்.


Next Story