9 மாத கர்ப்பிணி திடீர் சாவு வயிற்றில் இருந்த இரட்டை சிசுவும் பலியான பரிதாபம்


9 மாத கர்ப்பிணி திடீர் சாவு வயிற்றில் இருந்த இரட்டை சிசுவும் பலியான பரிதாபம்
x

9 மாத கர்ப்பிணி திடீரென இறந்தார். அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுவும் பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கரசானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 32), விவசாயி. அவரது மனைவி ராஜகுமாரி (27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. எனவே அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து அவர், செயற்கை கருத்தரித்தல் மூலம் கர்ப்பமானார். தற்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜகுமாரிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனால் அலறி துடித்த அவரை கணவர் தமிழரசன் வானூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வானூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story