தஞ்சையில் பனிப்பொழிவால் கடும் குளிர்


தஞ்சையில் பனிப்பொழிவால் கடும் குளிர்
x

தஞ்சையில் பனிப்பொழிவால் கடும் குளிர்

தஞ்சாவூர்

தஞ்சையில் நேற்று பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இன்னும் போதிய அளவு மழை பெய்யாத நிலையில் அவ்வப்போது பனியின் தாக்கமும் அதிக அளவில் காணப்படுகிறது. வழக்கமாக பனிப்பொழிவு தொடங்கி விட்டால் மழை குறைந்து விடும் என்பார்கள்.

ஆனால் தற்போது பருவம் தவறி மழை, பனிப்பொழிவு காணப்பட்டாலும் மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவும் அதிக அளவில் காணப்படுகிறது.

பனிப்பொழிவால் கடும் குளிர்

வழக்கமாக கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்கள் வரை கடும் குளிர் இருக்கும். இதனால் இதனை குளிர்காலம் என்பர். பனிப்பொழிவு காரணமாக குளிரும் அதிகஅளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடித்தது.

வயல்வெளிகள் காலை 7 மணி வரை தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் நடவு செய்த நெற்பயிர்களிலும் அதிக அளவு பனித்துளிகள் காணப்பட்டன. பனியானது வெண்மேகங்கள் போன்று காணப்பட்டன.

இது பொதுமக்களுக்கு ஊட்டி, கொடைக்கானலில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

வாகன ஓட்டிகள் சிரமம்

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி அவர்கள் சென்றனர். இருப்பினும் எதிரே வந்த வாகனங்கள், முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாததால் மெதுவாகவே சென்றன.

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டன. பஸ்களும் காலை நேரத்தில் விளக்கை எரியவிட்டபடி சென்று வந்தன. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களும் இந்த பனிபொழிவு காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்கள் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை அணிந்து செல்வதை காண முடிந்தது. வெயிலும் மந்த நிலையிலேயே காணப்பட்டதால் குளிர் தொடர்ந்து காணப்பட்டது.

ஸ்வெட்டர், மப்ளர் விற்பனை

தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டால் சாலையோரங்களில் ஸ்வெட்டர், மப்ளர் தற்காலிக கடைகள் அதிக அளவில் முளைத்துள்ளன. அங்கும் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.


Related Tags :
Next Story