ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கூறுவது தவறானது -தமிழக அரசு தகவல்


ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கூறுவது தவறானது -தமிழக அரசு தகவல்
x

ஆதிதிராவிடர் துணைத்திட்டத்தின் நிதியை வேறு திட்டங்களுக்காக அரசு பயன்படுத்துவதாக கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

சென்னை,

ஆதிதிராவிடர் துணைத்திட்டங்களின் நிதியை பயன்படுத்தியுள்ளதாக தேசிய பட்டியல் இனத்தினருக்கான ஆணையத்தில் ஒரு தனிநபர் புகார் அளித்துள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு முறையைப் பற்றிய தவறான புரிதலின் காரணமாகத்தான் இந்த புகாரும், அதுபற்றிய செய்திகளும் வந்துள்ளன.

திட்டங்களின் பயன்

பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும்.

பொதுத் திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயன்களுக்கு நிதி தனியாக ஒரு தலைப்பின் கீழ் ஒதுக்கப்படுகிறது. இத்தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை அப்பிரிவு மக்களுக்கு மட்டுமே செலவிட இயலும்.

மத்திய அரசு நிதி

இந்த தனி ஒதுக்கீடு முறையைத்தான் மத்திய அரசும், பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புறம்), அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) போன்ற முக்கிய திட்டங்களுக்கு இந்த முறையில்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

தமிழக அரசு நிதி

தமிழ்நாடு அரசு நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் இலவச சீருடை போன்ற மாநில அரசின் திட்டங்களுக்கும் இதே முறையில்தான் பட்டியலினத்தவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதுபோல்தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

2023-24-ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடியில், பட்டியல் இனத்தவருக்காக ரூ.1,540 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் இந்த மகத்தான புதிய திட்டத்தில் பட்டியலினத்தவர் விடுபடாமல், திட்டத்தின் பயன்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய, திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவருக்காக தனியாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

புதிய திட்டங்கள்

எனவே, ஒதுக்கப்பட்ட ரூ.1,540 கோடியை பட்டியலினத்தவருக்கு மட்டும்தான் செலவிட இயலும். இது மட்டுமன்றி, கடந்த 2020-21-ம் ஆண்டு ரூ.13 ஆயிரத்து 680 கோடியாக இருந்த பட்டியலின மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு, 2023-24-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் ரூ.17 ஆயிரத்து 76 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடித்தளமாக கொண்டுள்ள இந்த அரசு, பட்டியலினத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது.

பெரும் வரவேற்பு

பட்டியலினத்தவர்-பழங்குடியின தொழில் முனைவோர்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்க அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் ரூ.100 கோடி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டு உள்ளது. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய, 5 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டுடன், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட்டியலினத்தவர்-பழங்குடியின சமூகத்தினரின் புத்தொழில்களில் முதலீட்டு செய்வதற்கு, தமிழ்நாடு ஆதி திராவிடர், பழங்குடியினர் புத்தொழில் நிதி ரூ.50 கோடி ஒதுக்கீட்டுடன் இந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தவறான குற்றச்சாட்டு

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நிதியை சிறப்பாக செயல்படுத்த ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று இந்த ஆண்டு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அரசு அறிவித்தது. பட்டியல் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, இச்சட்டம் மிக விரைவில் நிறைவேற்றப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் செலவினத்தை சிறப்பாக கண்காணிக்க நிதி துறையில் ஒரு சிறப்பு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் நிதியை பிற திட்டங்களுக்காக பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. பட்டியலினத்தவரின் நலன் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் இந்த அரசு உறுதியாக உள்ளது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற இவ்வரசு இந்த நோக்கங்களை அடைய தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story