ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி பெற பெண்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும்-கலெக்டர் விஷ்ணு சந்திரன் தகவல்


ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி பெற பெண்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும்-கலெக்டர் விஷ்ணு சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்கல்வி கற்க பெண்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்கல்வி கற்க பெண்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இதில் வெல்டர், சோலார் டெக்னீசியன், தையல், பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஸ்பின்னிங், மெக்கானிக்கல், மெஷினிஸ்ட், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல், பிராசஸ், ஆட்டோமேசன் உள்ளிட்ட 18 தொழில் பிரிவுகள் உள்ளன. இவற்றில் சேர்ந்து படிப்பதற்கு skilltraining.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 20-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் 1,428 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் சேர்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவிகளுக்கு 88 இடங்களும் மீதமுள்ள 1,340 இடங்களில் மாணவிகளுக்கு 30 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவிகள் தொழில்துறையில் ஆர்வம் காட்டி படித்தால் வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும்.

பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும்

தற்போது மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கட்டிடம் கட்டுவதற்கான பயிற்சி பெற்று அங்கன்வாடி கட்டிடம் கட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்வமுள்ள பெண்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் எலக்ட்ரீசியன், பிட்டர், பிளம்பிங், டிசைனர் போன்ற எளிதான பயிற்சிகளை பெற்று பயன்பெறும் வகையில் அரசு போதிய இட ஒதுக்கீடுகளை வழங்கி உள்ளது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தொழில் பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் சேர்க்கை நிறைவடையும் வகையில் பெண்கள் தொழில் கல்வியை படித்து பயன்பெற வேண்டும்.

இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.


Next Story