ரேஷன் கடையில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு


ரேஷன் கடையில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு
x

ராயபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரத்தை பரிசோதித்தார்.

சென்னை

ரேஷன் கடையில் ஆய்வு

தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளராக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பொறுப்பு ஏற்றது முதல் தீவிர களஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தங்குதடையின்றி தரமாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுதவிர மாவட்டங்கள்தோறும் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், 'நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை' என்ற திட்டத்தின் ஒரு அங்கமாக சென்னை ராயபுரத்தில் உள்ள அமுதம் ரேஷன் கடைகளில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் குடோனில் வைக்கப்பட்டு இருந்த அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை பரிசோதித்து பார்த்தார்.

பனை வெல்லம்

ரேஷன் கடையின் முகப்பில் பனை வெல்லம் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அதை கையில் எடுத்து பார்த்துவிட்டு, "இதனை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் செல்கிறார்களா?" என்று கேட்டார். அப்போது 2 பெண்கள் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்தனர். அவர்களுக்கு பில் போடும் ரேஷன் கடை ஊழியர் நின்றுக்கொண்டே தனது பணியை கவனித்தார்.

உடனே டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், "சவுகரியமாக இருக்கையில் அமர்ந்து பணியை செய்யுமாறு" கூறினார். மேலும் பொருட்கள் வாங்க வந்த பெண்ணிடம், "எத்தனை ஆண்டுகளாக இந்த கடையில் பொருட்களை வாங்குகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த பெண், "7 வருடத்துக்கும் மேலாக பொருட்கள் வாங்குகிறேன்" என்று பதில் அளித்தார்.

அறிவுறுத்தல்

ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு படிக்கட்டுகள் உள்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.

ரேஷன் கடைகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கவேண்டும். பொருட்களை எளிதாக கையாள்வதற்கான வசதிகளை கையாளவேண்டும் என அடுக்கடுக்கான பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார்.


Next Story