ஜமாத் முன்னாள் செயலாளர் கத்தியால் குத்திக்கொலை


ஜமாத் முன்னாள் செயலாளர் கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 29 Aug 2023 7:15 PM GMT (Updated: 29 Aug 2023 7:16 PM GMT)

கொரடாச்சேரி அருகே காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஜமாத் முன்னாள் செயலாளரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி அருகே காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஜமாத் முன்னாள் செயலாளரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

ஒரு தலைக்காதல்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அத்திக்கடையை சேர்ந்தவர் சிராஜுதீன்(வயது 58). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், அத்திக்கடை ஜமாத் முன்னாள் செயலாளர் ஆவார்.

அதே ஊரை சேர்ந்தவர் முகமது அசாருதீன்(32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்த நிலையில், சிராஜுதீனின் உறவுக்கார பெண் ஒருவரை முகமது அசாருதீன் ஒருதலையாக காதலித்து வந்தார்.

தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

திருமணமான நிலையில் முகமது அசாருதீன், வேறொரு பெண்ணை காதலித்து வந்ததை சிராஜுதீன் தட்டிக்கேட்டார்.

இதனால் தனது காதலுக்கு இடையூறாக இருக்கிறார் என சிராஜுதீன் மீது முகமது அசாருதீன் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

கத்தியால் குத்திக்கொலை

நேற்று முன்தினம் இரவு அத்திக்கடை கடைவீதி பகுதியில் வந்து கொண்டிருந்த சிராஜுதீனை, முகமது அசாருதீன் வழிமறித்து கையில் வைத்திருந்த கத்தியால் சிராஜுதீனின் கழுத்தில் பலமுறை குத்தினார்.

இதில் நிலைகுலைந்த சிராஜுதீன், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.

கைது

இதை அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிராஜுதீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சிராஜுதீன் மகன் ரியாவுதீன், அளித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர்.


Next Story