திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் யாகம் நடத்திய ஜப்பான் நாட்டினர்


திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் யாகம் நடத்திய ஜப்பான் நாட்டினர்
x

தமிழ்மொழியின் சிறப்புகள் மேலும் பரவ வேண்டி தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் யாகம் நடத்தினர்.

தஞ்சாவூர்


தமிழ்மொழியின் சிறப்புகள் மேலும் பரவ வேண்டி தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் யாகம் நடத்தினர்.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்

தஞ்சையை அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும்பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குருபகவான் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இங்கு குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும்.

இங்கு வசிஷ்டேஸ்வரர் சன்னதிக்கு எதிரே குருசன்னதி அருகே அம்பாள் சன்னதியும் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று ஜப்பான் நாட்டை சேர்ந்த 20 பேர் வந்தனர். இதில் 8 பெண்கள், 12 ஆண்கள் அடங்குவர். இவர்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த 'தகாஈஹி' எனப்படும் பாலகும்பமுனி என்பவருடைய தலைமையில் வந்தனர்.

ஜப்பான் நாட்டினர் நடத்திய யாகம்

அவர்கள் குருசன்னதிக்கு எதிரே ருத்ர யாகம் நடத்தினர். இதில் கோவில் சிவாச்சாரியார் சுவாமிநாதன், நாகை ராமநாத சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர். தமிழ் மொழியின் சிறப்புகள் மேலும் பரவ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த யாகத்தை நடத்தினர். யாகம் தொடங்கி முடியும் வரை ஜப்பான்நாட்டினர் அங்கேயே அமர்ந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியம் முழங்க எடுத்துச் சென்று, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். இதே போல் அவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்கள் மற்றும் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனர்.

ஆயிரம் பேர் வருகை

இதுகுறித்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், நான் ஜப்பான் நாட்டில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அங்கு ஒத்தஹோமா பல்கலைக்கழகத்திலும், ஆசியன் நூலகத்திலும், ஆசியன் வாலைண்டர்ஸ் சென்டர் என்ற பெயரிலும் தமிழ் மொழியை கற்று தருகிறேன். என்னிடம் சுமார் 15 ஆயிரம் பேர் தமிழ் மொழியை கற்று வருகின்றனர். நான் தமிழ்மொழியை கற்றவர்களை இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளேன்.

உலகில் மூத்த மொழியாக உள்ள தமிழ் மொழியில் இருந்து தான், ஜப்பான் மொழி தோன்றியதாக ஜப்பானிய நாட்டவர்கள் கருதுகின்றனர். அதற்கான ஒற்றுமை தமிழ் மொழியின் ஓசைகளிலிருந்து ஜப்பான் மொழியின் ஓசையும் ஒற்றுமையாக உள்ளது.

தமிழ்மொழி கற்க ஆர்வம்

தமிழ் மொழியையும், பண்பாடு, கலாசாரத்தை கற்க ஜப்பான் நாட்டினர் மிகுந்த ஆர்வம் கொண்டு வருகின்றனர். அதே போல் அவர்களது ஆன்மிகத்தேடலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள், முக்கியமான சிவாலயங்களில் வழிபடுவதோடு இல்லாமல், சிறப்பு யாகங்களையும் நடத்தி வருகின்றனர்.

அதன்படி தற்போது திட்டை கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் நடத்தியுள்ளோம்.

நவக்கிரக தலங்கள்

இதைத் தொடர்ந்து நவக்கிரக கோவில்களுக்கு சென்று அங்கும் சிறப்பு யாகங்கள் நடத்த உள்ளோம். கோவில்களை வழிபட்டு செல்வதை விட, அந்த கோவில்களுக்கு சென்று யாகம் நடத்தி அந்த கோவிலைப் பற்றி ஜப்பான் நாட்டினர் முழுமையாக உணர்ந்து செல்கின்றனர் என்றார்.


Related Tags :
Next Story