நாமக்கல் தினசரி சந்தையில்மல்லிகை பூ கிலோ ரூ.560-க்கு விற்பனை


நாமக்கல் தினசரி சந்தையில்மல்லிகை பூ கிலோ ரூ.560-க்கு விற்பனை
x

நாமக்கல் தினசரி சந்தையில் வரத்து குறைவால் மல்லிகை பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ ரூ.560-க்கு விற்பனையானது.

நாமக்கல்

பூக்கள் விலை விவரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

இந்தநிலையில் தொடர் மழை காரணமாக நேற்று நாமக்கல் தினசரி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைவாக இருந்தது. குறிப்பாக வழக்கமாக ஒரு டன் வரும் மல்லிகை பூ நேற்று 200 கிலோ மட்டுமே வந்ததால், அதன் விலை கிடுகிடு என உயர்ந்தது.

கடந்த 26-ந் தேதி கிலோ ரூ.360-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.560-க்கும், கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

பூக்கள் உதிர்ந்தன

இதேபோல் கடந்த 26-ந் தேதி கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. மேலும் கடந்த 26-ந் தேதி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பூக்கள் உதிர்ந்து விட்ட நிலையில் அவற்றின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதுவே பூக்களின் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story