கரூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ரூ.2,000-க்கு விற்பனை


கரூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ரூ.2,000-க்கு விற்பனை
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூரில் உள்ள பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ரூ.2,000-க்கு விற்பனையானது.

கரூர்

பூ மார்க்கெட்

கரூர் ரெயில்வே ஜங்ஷன் அருகே மாரியம்மன் பூ மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர். இந்த பூ மார்க்கெட்டிற்கு மாயனூர், மலைப்பட்டி, கருப்பூர், லந்தக்கோட்டை, செக்கணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை பறித்து கொண்டு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்களை இங்கிருந்து வியாபாரிகள், பூக்கட்டும் பெண்கள் உள்ளிட்டோர் வாங்கி செல்கின்றனர்.

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருப்பதால், இறைவழிபாட்டில் பூக்களின் தேவை பிரதானமாக இருக்கும். அந்த வகையில் தங்களுக்கு தேவையான பூக்களை ஏலம் மூலம் வாங்கி செல்ல பூ கட்டி விற்கும் பெண்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நேற்று காலை முதலே கரூர் பூ மார்க்கெட்டில் குவிந்தனர்.

பூக்கள் விலை விபரம்

இதனால் பூக்களின் விற்பனை படுஜோராக நடந்தது. பின்னர் அவர்கள், தங்களுக்கு தேவையான பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.2,000-க்கும், முல்லை பூ ரூ.1,200 முதல் ரூ.1,300 வரைக்கும், ஜாதிப்பூ ரூ.750-க்கும், ரோஜாப்பூ ரூ.120-க்கும், செவந்தி பூ ரூ.100-க்கும், அரளிப்பூ ரூ.150-க்கும், துளசி 1 கட்டு ரூ.10-க்கும் விற்பனையானது. மேலும் வியாபாரிகள் உள்ளிட்டோர் இங்கிருந்து பூக்களை வாங்கி சென்று கோர்த்து விற்கும் போது அவற்றின் விலை இன்னும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

நொய்யல்

நொய்யல் பகுதியில் நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1300-க்கும், சம்பங்கி ரூ250-க்கும், அரளி ரூ.320- க்கும், ரோஜா ரூ.300- முல்லைப் பூ ரூ.1500-க்கும், பச்சை முல்லை ரூ.1500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.300- க்கும், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். வரத்து குறைவாலும், பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளியை முன்னிட்டும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.


Next Story