ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் 2-வது நாளாக விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கண்ணனிடம் கோவையில் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கண்ணனிடம் கோவையில் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும், பல ஆவணங்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு தனிப்படையினர் சம்மன் அனுப்பி, அவர்களை கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கார் டிரைவர்
ஏற்கனவே ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக இருந்த கண்ணனிடம் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கோவை பிஆர்.எஸ். வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
நேற்று 2-வது நாளாக ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காலை 11 மணி முதல் இரவு 7.30 மணி வரை விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல் தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






