வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை


வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 25 Aug 2023 7:45 PM GMT (Updated: 25 Aug 2023 7:45 PM GMT)

வேடசந்தூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

வங்கி மேலாளர்

வேடசந்தூர் அருகே உள்ள தம்மனம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45). இவர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி தீபா (40). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீடு மாடி, கீழ்தளத்தை கொண்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

நகை-பணம் கொள்ளை

பின்னர் வீட்டின் முன்பக்கம் இருக்கும் மரக்கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு கீழ்தளத்தில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து, அதில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று அதிகாலை விஜயபாஸ்கர் எழுந்து வீட்டின் கீழ்தளத்துக்கு வந்தார். அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு பணம், நகைகள் கொள்ளை போய் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) இம்மானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வங்கி மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story