விழுப்புரம் அருகேபெண்ணிடம் நகை பறிப்பு2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகேபெண்ணிடம் நகை பறிப்பு2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள தேவநாதசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளிநாயகம் மனைவி சுபலட்சுமி (வயது 40). இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் கவரிங் நகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும் அவர், தனது கடையை பூட்டிவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார். தேவநாதசாமி நகர் முதல் தெரு சந்திப்பு அருகே செல்லும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், திடீரென சுபலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3¾ பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

உடனே அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து ஓடி வருவதற்குள் அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story