பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x

தஞ்சை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்
தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி கருடாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையன். கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி அருந்ததீ (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று ராமையன் மகள்களுடன் வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தார். அருந்ததீ மட்டும் தனது மகனுடன் வீட்டின் முன்பக்கம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அருந்ததீயின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருந்ததீ சங்கிலியை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு கணவர் மற்றும் மகன் சுதாரிப்பதற்குள் அந்த மர்மநபர் ஏற்கனவே மற்றொரு நபர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். திருடனுடன் போராடியதில் அருந்ததீக்கு கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் ராமையா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது ராமையா வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடையங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







Next Story