வேப்பூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு போலீஸ் விசாரணை


வேப்பூர் அருகே  பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு  போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 Dec 2022 6:45 PM GMT (Updated: 10 Dec 2022 6:46 PM GMT)

வேப்பூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்


வேப்பூர்,

வேப்பூர் அடுத்த விளம்பாவூரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மனைவி காயத்ரி (வயது 24.) இவர் வேப்பூர் அடுத்த காட்டுமயிலூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரது குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், நேற்று காலை 10 மணிக்கு தனது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு வேப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால், ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர், வேப்பூர் கூட்டுரோடு அருகே வந்த போது திடீரென காயத்ரிக்கு அருகே வந்து, அவர் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இதுகுறித்து காயத்ரி வேப்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், காட்டுமயிலூர் பிரிவு சாலை, வேப்பூர் கூட்டுரோடு, சென்னை சர்வீஸ் சாலை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதில் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் விசாரணையை முன்னெடுத்து, வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த, இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story