காரைக்குடியில்-பூட்டிய வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை


காரைக்குடியில்-பூட்டிய வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 24 March 2023 6:45 PM GMT (Updated: 24 March 2023 6:45 PM GMT)

காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பீரோ உடைப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்தோடு வீட்டை பூட்டிவிட்டு கோவில் திருவிழாவிற்கு சென்றார். குடும்பத்தினர் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். இவர் தான் வேலை பார்க்கும் டிரைவிங் ஸ்கூலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

வீட்டில் தலைவாசல் சாவி கோவிலுக்கு சென்ற மனைவியிடம் இருந்ததால் வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமிற்கு சென்றார். அப்போது வீட்டில் பின்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த காளிதாஸ் உள்ளே சென்று பார்த்தபோது, அறை மற்றும் பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

நகைகள்

பீரோவில் வைத்திருந்த 29½ பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தினை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பார்வையிட்டு மேல் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story