திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகள் திருட்டு


திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகள் திருட்டு
x

கும்பகோணம் பஸ் நிலையத்தில் திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

கும்பகோணம் பஸ் நிலையத்தில் திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பஸ்சில் சென்ற டாக்டர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் அண்ணாமலை(வயது 24). டாக்டரான இவர், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு தனது மனைவி அபூர்வா மற்றும் தாயாருடன் கும்பகோணம் வழியாக பஸ்சில் செல்ல திட்டமிட்டார்.

அதன்படி கும்பகோணம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த அண்ணாமலை தனது மனைவி மற்றும் தாயாருடன் வடலூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

30 பவுன் நகைகள் திருட்டு

அப்போது தான் கொண்டு வந்திருந்த கைப்பையை பஸ்சில் உடைமைகளை வைக்கும் பகுதியில் வைத்திருந்தார். அந்த கைப்பையில் 30 பவுன் நகைகள் இருந்தன.

பஸ் புறப்பட்டு கும்பகோணம் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது அவர் கைப்பையை பார்த்தார். அதை காணவில்லை.

கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்

இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை மற்றும் குடும்பத்தினர் பஸ் முழுவதும் கைப்பையை தேடினர். இதையடுத்து அவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி கும்பகோணம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். இதுதொடர்பாக அண்ணாமலை கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் மர்ம நபர் ஒருவர் அண்ணாமலை சென்ற பஸ்சில் ஏறி கைப்பையை திருடிக்கொண்டு பின்பக்கமாக இறங்கி ஓடிச்செல்வது பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story