பயணியிடம் ரூ.1 கூடுதலாக கட்டணம் வசூல்: போக்குவரத்து கழகத்துக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு


பயணியிடம் ரூ.1 கூடுதலாக கட்டணம் வசூல்:  போக்குவரத்து கழகத்துக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்  நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Dec 2022 6:45 PM GMT (Updated: 9 Dec 2022 6:45 PM GMT)
நாமக்கல்

பஸ் பயணியிடம் கூடுதலாக ரூ.1 கட்டணம் வசூல் செய்த போக்குவரத்து கழகத்துக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

கூடுதலாக ரூ.1 கட்டணம் வசூல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட பஸ்சில் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோட்டுக்கு சென்றார். அப்போது பஸ் கண்டக்டர் ரூ.7-க்கு பதில், ரூ.8 வசூல் செய்து உள்ளார்.

அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாமக்கல் பயனீட்டாளர் சங்கத்தின் மூலம் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய நுகர்வோர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதில் தமிழக அரசு போக்குவரத்து கழக துணை மேலாளரும், கண்டக்டரும் சேர்ந்து, திருச்செங்கோடு- –ஈரோடு இடையே சரியான தூரத்தை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில், கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை, 2 மாதத்துக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் நிலையில் இருவரும் ரூ.10 லட்சம் அபராதத்தை தமிழ்நாடு நுகர்வோர் நலநிதிக்கு செலுத்த வேண்டும்.

ரூ.30 ஆயிரம் அபராதம்

மேலும் கண்டக்டர், துணை மேலாளர் வட்டார போக்குவரத்து கழகம் (சேலம் மேற்கு), திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் இணைந்து, முறையீட்டாளரிடம் கூடுதலாக வசூலித்த ரூ.1-ஐ திரும்ப செலுத்த வேண்டும்.

நேர்மையற்ற வணிகமுறையை கடைபிடித்ததற்கும், சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கும் இழப்பீடாக முறையீட்டாளருக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் என ரூ.30 ஆயிரம் அபராதத்தை 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story