கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை- பவானி கோர்ட்டு தீர்ப்பு


கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை- பவானி கோர்ட்டு  தீர்ப்பு
x

கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பவானி கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

ஈரோடு

பவானி

கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பவானி கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

கொலை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரிச்சேரிபுதூர் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 24).

பவானி அருகே உள்ள தளவாய்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (50).

சதீஷ்குமாருக்கும், மணிகண்டனுக்கும் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்தது. மேலும் மணிகண்டனிடம், தான் கொடுத்த கடன் தொகையை சதீஷ்குமார் கேட்டு மிரட்டி உள்ளார்.

இதைத்தொடர்ந்து மணிகண்டன், அவருடைய உறவினர்களான தளவாய்பேட்டையை சேர்ந்த சூரிய பிரகாஷ் (35), ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த ஆனந்த பிரபு (35), வெங்கடேஷ் (35) ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி நள்ளிரவு சதஷ்குமாரை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், சூரியபிரகாஷ், ஆனந்தபிரபு, வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு பவானி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி லதா நேற்று வழங்கினார். அந்த தீர்ப்பில், 'சதீஷ்குமாரை ெகாலை செய்த 4 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் கட்ட வேண்டும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.

இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டு கோவையில் உள்ள மத்திய சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.


Next Story