சேலம் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறியவர் ரெயில் முன் பாய்ந்து சாவு


சேலம் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறியவர் ரெயில் முன் பாய்ந்து சாவு
x

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறியவர் ரெயில் முன் பாய்ந்து இறந்தார். இவர், ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சேலம்

முதியவர் தற்கொலை

சேலம் டேனிஷ்பேட்டை யார்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கோவை-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயில் முன் பாய்ந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர்.

ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி கிடந்த முதியவர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர் யார் என்பது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர்.

தற்கொலைக்கு முயன்றவர்

விசாரணையில், அவருடைய பெயர் கிருஷ்ணன் (வயது 60) என்பதும், காடையாம்பட்டி அருகே டேனிஷ்பேட்டை பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கிருஷ்ணன், நேற்று முன்தினம் காலையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது ரெயிலில் அடிபட்டு காயம் அடைந்த கிருஷ்ணன், 108 ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து அவர், வெளியேறி மீண்டும் டேனிஷ்பேட்டை யார்டு பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. முன்னதாக ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட போது, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கிருஷ்ணன் புலம்பியபடி இருந்துள்ளார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் அங்கிருந்து வெளியேறி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story