நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் சசிகலா, விஜயபாஸ்கர் மீது விசாரணைக்கு பரிந்துரை


நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் சசிகலா, விஜயபாஸ்கர் மீது விசாரணைக்கு பரிந்துரை
x

ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையில் சசிகலா, சி.விஜயபாஸ்கர் மீது அரசு விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். நேற்று மாலை 5.55 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை கூட்டம் இரவு 7.10 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த அமைச்சரவை கூட்டம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அருணா ஜெகதீசன் அறிக்கை

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் இரு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 22.5.2018 அன்று பேரணி நடத்திய மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தால் 18.5.2022 அன்று அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது.

சட்டசபையில் வைக்க முடிவு

இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல்துறையினர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகள் உரிய தகுந்த நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், அதற்கான விவர அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைப்பதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது

ஜெயலலிதா மரணம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அதைத்தொடர்ந்து 5.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதிஅ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் 27.8.2022 அன்று அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையும், அமைச்சரவையின் முன்வைக்கப்பட்டது. இவ்வறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது.

விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது, சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விவர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சில இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் சமுதாய கேடுகள் குறித்தும், அதுதொடர்பாக தடை சட்டம் கொண்டு வருதல் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இத்தகைய தடை சட்டங்கள் குறித்த நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையிலும், பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களிடம் இருந்து வரப்பெற்றுள்ள ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டும், இதுபோன்ற விளையாட்டுக்களை தடை செய்வது குறித்த சட்ட வரைவை வகுத்தல் குறித்தும், அதில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த வகை விளையாட்டுகளை தடை செய்வதற்காக அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ள விவரமும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story