அரசு பள்ளியில் சிறார் திரைப்படம் சார்ந்த போட்டிகள்


அரசு பள்ளியில் சிறார் திரைப்படம் சார்ந்த போட்டிகள்
x

அரசு பள்ளியில் சிறார் திரைப்படம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான சிறார் திரைப்படம் சார்ந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாத போட்டிகள் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி வட்டார அளவில் நேற்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சிறார் திரைப்பட போட்டியினை வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்கள். பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார், ஆசிரிய பயிற்றுனர் குறிஞ்சிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளின் நடுவர்களாக ஆசிரியர்கள் செயல்பட்டனர். ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான ஈடி, நிலா சிறார் திரைப்படங்களில் குறும்படம் தயாரித்தல், திரைக்கதை விமர்சனம், தனிநபர் நடிப்பு என்ற தலைப்புகளில் அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளில் இருந்து 64 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குறும்படம் தயாரித்தல் போட்டியில் சூரியமணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் அருண்குமார் முதல் இடத்தையும், உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதி இரண்டாம் இடத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவா மூன்றாம் இடத்தையும், தனி நபர் நடிப்பு போட்டியில் ஆயுதகளம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி முதலிடத்தையும், த.பொட்டக்கொல்லை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா 2-ம் இடத்தையும், உடையார்பாளையம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கௌதம் மூன்றாம் இடத்தையும், திரைக்கதை விமர்சனம் போட்டியில் ஆயுதகளம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவி யமுனா முதலிடத்தையும், செங்குந்தபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணர் விஸ்வத்சேனன் இரண்டாம் இடத்தையும், உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா 3-ம் இடத்தையும் பிடித்தனர். ஒவ்வொரு போட்டி பிரிவிலும் முதல் 2 இடம் பிடித்த மாணவர்கள் அரியலூரில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர்.


Next Story