தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி


தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 6 Jun 2023 6:46 PM GMT)

தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற உள்ளது

சிவகங்கை

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டும், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் சிங்கம்புணரியில் தி.மு.க. சார்பில் தென்னிந்திய அளவில் பெண்களுக்கான 3-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி வருகிற 10-ந் தேதி மற்றும் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கபடி போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்காக சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவில் பின்புறம் உள்ள கலையரங்கத்தின் முன்பு மைதானத்தில் கேலரி அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஏற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் தி.மு.க. நகர அவை தலைவர் சிவக்குமார் கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டும் சிங்கம்புணரியில் நடைபெற உள்ள பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொள்ள உள்ளன. போட்டியில் முதல் பரிசாக அமைச்சர் பெரிய கருப்பன் சொந்த நிதியிலிருந்து ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரமும், 2-ம் பரிசாக சிங்கம்புணரி பேரூராட்சி தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான அம்பலமுத்து ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசாக முறையூர் ஊராட்சி தலைவர் சுரேஷ் ரூ.50 ஆயிரமும், 4-ம் பரிசாக சிங்கம்புணரி பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ரூ.25 ஆயிரமும் வழங்க உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஒன்றிய, நகர தி.மு.க. மற்றும் சார்பு அணிகள் சார்பில் செய்து வருகின்றனர் என்றார்.


Next Story