கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்தைப்பூச திருவிழா தேரோட்டம்


கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்தைப்பூச திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

தைப்பூச திருவிழா

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி திருவிழா நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

முக்கிய விழாவான தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நாளை காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். பின்னர் காலை 10.30 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று பின்னர் நிலையை வந்தடைகிறது.

சிறப்பு வழிபாடு

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்திலுள்ள 25 கிராம மக்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story