குரூப்-4 தேர்வுக்கான கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி தேர்வு மையம் மாற்றம் -டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


குரூப்-4 தேர்வுக்கான கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி தேர்வு மையம் மாற்றம் -டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
x

குரூப்-4 தேர்வுக்கான கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி தேர்வு மையம் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி சமீபத்தில் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைப்பதற்கான சூழல் இல்லாத காரணத்தினால், அங்கு அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மாற்றியுள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிர்வாக காரணங்களினால், கள்ளக்குறிச்சி நீலமங்களம் ஏ.கே.டி. அகாடெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏ.கே.டி. மெமோரியல் வித்யா சாகெத் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு மறுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். மேற்படி விண்ணப்பதாரர்களுக்கு மாற்று ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விவரம் தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story