ராமநாதபுரத்தில் யூதர் கல்வெட்டு கண்டெடுப்பு


ராமநாதபுரத்தில் யூதர் கல்வெட்டு கண்டெடுப்பு
x

தமிழ்நாட்டில் முதன்முறையாக யூதர்களின் சூதபள்ளியை குறிக்கும் கி.பி.13-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு ராமநாதபுரம் அருகே கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

தமிழ்நாட்டில் முதன்முறையாக யூதர்களின் சூதபள்ளியை குறிக்கும் கி.பி.13-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு ராமநாதபுரம் அருகே கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

கல்வெட்டு

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பழமையான கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:- சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் வாலாந்தரவை செ.புல்லாணி என்பவரின் தந்தை கிணறு கட்டுவதற்காக கடற்கரை பாறைக் கற்களை பெரியபட்டினத்தில் இருந்து வாங்கி வந்துள்ளார்.

அதனுடன் கல்வெட்டு உள்ள இந்த கல்லும் வந்துள்ளது. 3 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட இந்த கல் தூணில் 50 வரிகளில் நான்கு பக்கத்திலும் கல்வெட்டு உள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இந்த கல்வெட்டில் சூதபள்ளியான ஐந்நூற்றுவன் பெரும்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட காணியாவதுக்கு (உரிமை நிலத்தின்) எல்லை சொல்லும்போது, அங்கிருந்த பள்ளிகள், நிலங்கள், தோட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. கிழக்கு எல்லையில் வளைச்சேரி, முடுக்குவழி சொல்லப்படுகிறது.

யூதர்கள்

தெற்கெல்லையில் திருமுதுச்சோழசிலை செட்டியார், பதிநெண்பூமி செயபாலன், கூத்தன் தேவனார் ஆகியோரின் தோட்டங்களும், மேற்கெல்லையில் நாலு நாட்டாநி சோணச்சந்தி, ஸ்ரீசோழப்பெருந்தெரு, தரிசப்பள்ளி மதிளி, பிழார் பள்ளி, தரிசாப்பள்ளி தென்மதிள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இங்கு ஐந்நூற்றுவர், பதிநெண்பூமி, நானாதேசி ஆகிய வணிக குழுக்களுக்கு சொந்தமான இடங்கள், தோட்டங்கள் இருந்து உள்ளன.

பெரியபட்டினத்தில் சூதபள்ளி, தரிசப்பள்ளி, பிழார்பள்ளி ஆகிய பள்ளிகள் இருந்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சைவ, வைணவக் கோவில்கள் தவிர்த்த பிற மத வழிபாட்டிடங்கள் பள்ளி என அழைக்கப்பட்டு உள்ளது. இதில் சூதபள்ளி என்பது யூதர்களின் பள்ளி ஆகும். ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழுவினர் யூதர்களுக்கு பெரியபட்டினத்தில் பள்ளி கட்டிக் கொடுத்து உள்ளனர்.

பெரியபட்டினத்தில் இருந்த மரியம் என்ற யூதப் பெண்ணின் ஹீப்ரு மொழி கல்லறைக் கல்வெட்டு மத்திய தொல்லியல் துறையின் 1946-47-ம் ஆண்டறிக்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டு உள்ளது.

கி.பி.13-ம் நூற்றாண்டு

பெரியபட்டினம் ஜலால் ஜமால் என்ற முஸ்லிம் பள்ளி பிற்காலப் பாண்டியர்களின் வெட்டுப் போதிகைகள், சதுரத் தூண்களுடன் கி.பி.13-ம் நூற்றாண்டு கட்டிடக்கலை அமைப்பில் கடற்கரைப் பாறைகளால் கட்டப்பட்டு உள்ளது.

சோழநாட்டு வணிகர்கள் பெரியபட்டினத்தில் தங்கி இருந்த தெரு ஸ்ரீசோழப்பெருந்தெரு எனப்படுகிறது. தானமாக வழங்கிய நிலத்துக்கு காணி கல் வெட்டி நாட்டிக்கொள்ள சொல்லப்பட்டு உள்ளது. இறையிலி, மனைவரி, பெரு நாங்கெல்லைக்கு ஆகிய சொற்களும், தொன்றுதொட்டு வரும் வழக்கம் என்ற பொருளில் பண்டாடு பழநடை என்ற சொல்லும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. எழுத்தமைதியை கொண்டு இதை கி.பி.1200-1250-க்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக கூறலாம். தமிழ்நாட்டில் முதன்முறையாக யூதர்களின் சூதபள்ளியை குறிக்கும் கி.பி.13-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு ராமநாதபுரம் அருகே கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story