கல்குவாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி பாதிப்பு


கல்குவாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால்  காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி பாதிப்பு
x
தினத்தந்தி 1 July 2023 5:11 PM GMT (Updated: 2 July 2023 9:59 AM GMT)

கல்குவாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர்

காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி

உடுமலையை அடுத்ததிருமூர்த்தி அணை மூலமாக பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து77 ஆயிரத்து 152 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர்வினியோகம் செய்யப்படுகிறது. தளி வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 63 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

பி.ஏ.பி. திட்டத்தின் உயிர் நாடியான காண்டூர் கால்வாய் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படும்போது பாறைகள், மண் கால்வாயில் சரிந்து பக்கவாட்டு சுவர்களை சேதப்படுத்தி வந்தது. சேதமடைந்ததை சீரமைக்கும் வகையில் தமிழக அரசு 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் நீரிழிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டது.

மந்தமாக நடக்கும் நிலை

இந்த சூழலில் விடுபட்ட பகுதியில் புனரமைப்பு பணி மேற்கொள்ள 2021-ம் ஆண்டு ரூ.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு இருந்ததால் ஆண்டின் 10 மாதங்கள் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு 500 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஏப்ரல் 27-ந் தேதி முதல் மீண்டும் கால்வாய் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு 3 கிலோமீட்டர் நீளத்திற்கு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கான்கிரீட் சுவர் அமைப்பதற்கு தேவையான மூலப்பொருளான செயற்கை மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் உற்பத்தி செய்யும் குவாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கால்வாய் சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி தற்போது மூன்று இடங்களில் நடைபெற்று வருகிறது. சேகரித்து வைக்கப்பட்ட மண்ணைக்கொண்டு கான்கிரீட் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது செயற்கை மணல் தட்டுப்பாட்டால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கால்வாயில் உடைக்கப்பட்ட பகுதிகளை சமப்படுத்தி கம்பி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு கம்பிகள் கட்டும் பணிகள் முடிவுற்று கான்கிரீட் போடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. மணல் குவாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் உடனடியாக கான்கிரீட் பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து முடித்து குறித்த காலத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story