அண்ணாபிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவிப்பு


தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் அண்ணாபிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கனிமொழி எம்.பி.

தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா உருவச்சிலைக்கு தி.மு.க. மாநில துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி. தலைமையில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தி.மு.க. கட்சி நிர்வாகிகள் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலர் உமரிசங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் பாரதியார் பஸ் நிலையம் முன்பு அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு தலைமை தாங்கினார். தி.மு.க நகரச் செயலாளர் வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐய்யன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

எட்டயபுரம்

எட்டயபுரம் தி.மு.க கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக நடுவிற்பட்டி பட்டத்து விநாயகர் கோவில் முன்பு அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரதி கணேசன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்திற்கு கோவில்பட்டி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story