காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா - புனித நீராடி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்


காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா - புனித நீராடி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
x

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்,

ஆடி அமாவாசை நாள் அன்று நதியில் நீராடி காரையார் காணிக்குடியிருப்பில் வீற்றிருக்கும் மகாலிங்கசுவாமி, சொரிமுத்து அய்யனார் போன்ற சுவாமிகளை தரிசிக்கின்றார்களோ அவர்களுடைய பாவங்கள் நீங்கி அவர்களுக்கு சுபிட்சமான வாழ்வு கிடைக்கும் என்பது அகஸ்தியரின் அருள் வாக்கு.

அதன் அடிப்படையில் பண்டைய காலம் முதல் காலம் காலமாக நடந்து வரும் இக்கோவிலின் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி கோவில் வளாகத்தில் கால்நாட்டு விழா நடந்தது.

ஆடி அமாவாசை நாளான இன்று மகாலிங்கசுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயர், கரடி மாடசாமி, தூசிமாடசுவாமி போன்ற தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் காலையிலேயே புனித நீராடி பேச்சியம்மன் சன்னதி, பட்டவராயர் சன்னதிகளுக்கு முன்பு பொங்கலிடத்துவங்கினர்.

பக்தர்களில், சங்கிலி பூதத்தார் சுவாமி கோமரத்தாடிகள் சங்கிலிகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் தங்கியிருக்கு பக்தர்கள் தாமிரபரணிநதியில் குளித்து மகிழ்ந்தனர்.

மாலையில் பட்டவராயர், சங்கிலிபூதத்தார் சன்னதிகள் முன்பு பக்தர்கள் தீமிதித்து பூக்குழி இறங்க உள்ளனர்.

ஏற்பாடுகளை கோவில் பொறுப்பாளர் டி.என்.எஸ்.எம் சங்கராத்மஜன் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், உதவியாளர் பசுபதி ஆகியோர் செய்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, மருத்துவதுறை, சுகாதார துறை, பாதுகாப்பு துறை, உள்ளாட்சி துறையினர் தீவிரமாக செயல்பட்டனர்.


Next Story