கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்; சன்மார்க்க சத்திய சங்கம் தீர்மானம்


கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்; சன்மார்க்க சத்திய சங்கம் தீர்மானம்
x

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று சன்மார்க்க சத்திய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று சன்மார்க்க சத்திய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், ஈரோடு அருள் சித்தா கிளினிக் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கும், வள்ளலார் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுச்செயலாளர் ஜி.வெற்றிவேல், கி.உமாபதி முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ்நாடு அரசு வள்ளலார் 200 முப்பெரும் விழாவினை 52 வாரங்கள் தொடர் நிகழ்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடத்தியதற்காகவும், அன்னதான திட்டம் நடத்த ஆணை பிறப்பித்ததற்காகவும், வள்ளலார் சர்வதேச மையம் ரூ.100 கோடியில் அமைக்க முடிவு செய்ததற்காகவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். இதற்கு அந்த மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

முப்பெரும் விழா

வள்ளலார் முப்பெரும் விழாவின் நிறைவு விழா வருகிற 5-ந்தேதி சென்னை கலைவானர் அரங்கத்தில் நடக்கிறது. அந்த விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும் தலைமை சங்கம் செய்யும். வடலூர் தலைமை சங்கத்தின் சார்பில் மாநில மாநாடு, சங்கத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழா, வள்ளலார் 200-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சென்னையில் வருகிற டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும்.

சன்மார்க்க மன்றம் சார்பில் பள்ளிக்கூட, கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சன்மார்க்கம் தொடர்பான கருத்துகள் அடங்கிய நூல்களும், திருவருட்பா மற்றும் உரைநடை பகுதி நூல்களும் தலைமை சங்கம் சார்பில் வெளியிடப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்க ஊர்வலம் நடந்தது. இதில் மாநில பொருளாளர் நஞ்சுண்டன், அமைப்பு தலைவர் அருள் மற்றும் மாவட்டத்தின் தலைமை சங்க தலைவர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story