மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


நாமக்கல் மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

1,008 தீபம்

கார்த்திகை தீப திருவிழாவை நேற்று இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி பெண்கள் வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளிலும் நேற்று வழக்கம்போல் 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மகிழ்ந்தனர்.

நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் மகா சங்கல்பம், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பால தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் வைக்கப்பட்டு இருந்த விளக்குகளில் பெண்கள் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர்.

கூம்பு கொளுத்தினர்

இதேபோல் நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில், சந்தைபேட்டை புதூர் செல்வவிநாயகர் கோவில், குட்டைதெரு விநாயகர் கோவில், கடைவீதி சக்தி விநாயகர் கோவில், தட்டாரத்தெரு ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

மேலும் நகர் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தது. பெரும்பாலான கோவில்களின் முன்பு கூம்பு (சொக்கப்பனை) கொளுத்தப்பட்டது. சுற்றிலும் நின்ற பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உப்பை தூவினர்.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நகர் முழுவதும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் ஆங்காங்கே நடந்தது. வீடுகள் தோறும் பெண்கள் கொளுக்கட்டை மற்றும் சுண்டலை சாமிக்கு படைத்து, பின்னர் குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

காந்தமலை முருகன்

இதேபோல் மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகையையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடந்தது. விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வெண்ணந்தூர்

அதேபோல வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் செங்குந்தர் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவிலின் விளக்கு தூனில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story