கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு - அண்ணாமலை பேட்டி


கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 1 April 2024 11:42 AM GMT (Updated: 1 April 2024 12:11 PM GMT)

மீனவர்கள் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க.வே பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

கோவை,

கோவை பீளமேட்டில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க.விற்கு சில கேள்விகளை வைத்திருக்கிறேன். தி.மு.க.வினர் தமிழக மக்களை வஞ்சித்திருக்கிறார்கள், ஏமாற்றி இருக்கிறார்கள்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் காங்கிரஸ் மட்டுமின்றி, தி.மு.க.வின் சதியும் உள்ளது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. ஆர்.டி.ஐ. கிடைக்க பெற்ற தகவல்களில் தெளிவாக தெரிந்துள்ளது. ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் தி.மு.க.தான். மீனவர்கள் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க.வே பொறுப்பேற்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. கச்சத்தீவை மீண்டும் நம்வசம் கொண்டுவர வேண்டும், அப்போதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். கச்சத்தீவு மீட்பு வாக்குறுதி தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். தி.மு.க.வின் போலி முகத்திரையை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கச்சத்தீவு பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு பைசா கூட ஆதாயம் கிடையாது. இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story