கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x
தினத்தந்தி 17 Sep 2023 4:45 PM GMT (Updated: 17 Sep 2023 4:46 PM GMT)

பெண்களின் துயரம் துடைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை இனி எந்த கொம்பனாலும் அழிக்கவோ, ரத்து செய்யவோ முடியாது என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு,

பெண்களின் துயரம் துடைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை இனி எந்த கொம்பனாலும் அழிக்கவோ, ரத்து செய்யவோ முடியாது என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

கலைஞர் நூற்றாண்டு விழா

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள கீழ்செட்டிப்பட்டு, சேர்ப்பாப்பட்டு, தலையாம்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் கலைஞரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் ந.சந்திரன், த.ரமணன் பி.கோவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு குடும்ப தலைவிகளுக்கு சமையல் குக்கர் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:-

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் நாம் இன்றைக்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அவரை போன்று தாயுள்ளம் கொண்ட ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. அவரது சிந்தனை எப்போதுமே கிராமத்தை நோக்கியே இருக்கும்.

நாட்டின் பஞ்சத்தை, பட்டினிச்சாவை தமிழகத்திலிருந்து விரட்டியவர் கருணாநிதி. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தந்தவர்.

முதல் கையெழுத்து

அவரது வழியில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கி முதல் கையெழுத்து போட்டார்.

அதைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் ரத்து, பெண்கள் அடகு வைத்த நகைகளை மீட்டு தந்தது, டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற திட்டங்களை கொண்டு வந்தார்.

மேலும் புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்து அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரிகளில் படிப்பதற்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் என ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.

பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம்

பெண்கள் குடும்பத்தில் அனைத்து வேலைகளையும் செய்வதோடு குழந்தைகளை பராமரித்து அவர்களை படிக்க அனுப்புவது திருமண ஏற்பாடுகள் செய்வது வேலைக்கு அனுப்புவது என எல்லா வகையிலும் குடும்ப சுமையை சுமக்கிறார்கள்.

பெண்களின் உழைப்பை நான் அங்கீகரிக்கிறேன் என்று சொல்லி அதற்கு அடையாளமாக உரிமை தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ரத்து செய்ய முடியாது

தேர்தல் வந்தால் தான் பெண்கள் தங்கள் வீட்டு முன்பு எந்த கட்சியை ஆதரிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக கோலம் போடுவார்கள். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரவேற்று நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அனைத்து பெண்களின் உள்ளங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் பிடித்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

இனி உலக சரித்திரத்தில் மு.க.ஸ்டாலின் இடத்தை பெண்களின் மனதில் யாரும் பிடிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் தமிழகத்தை யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். ஆனால் எந்த கொம்பனாலும் இனி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமை தொகையை ரத்து செய்யவோ திட்டத்தை அழிக்கவோ முடியாது. உங்கள் வாழ்நாளெல்லாம் இந்த உரிமைத்தொகை உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.

இன்னும் தகுதியுடையவர்களில் இருந்து அவர்களுக்கு இந்த உரிமை தொகை கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. தாலுகா உதவி மையங்களை அணுகி முறையிட்டால் 15 நாட்களுக்குள் தகுதி உடைய அனைவருக்கும் உரிமைத் தொகை கட்டாயம் வந்து சேரும் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்டவாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.



Next Story