முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்கு கேரள வனத்துறை முட்டுக்கட்டை: துணை கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் குற்றச்சாட்டு


முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்கு கேரள வனத்துறை முட்டுக்கட்டை:  துணை கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:45 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள வனத்துறையினர் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாக துணை கண்காணிப்பு குழு ஆய்வுக்கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர்.

தேனி

துணை குழு ஆய்வு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையை கண்காணித்து பராமரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 2014-ம் ஆண்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த குழுவுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து அணையின் நிலவரம் குறித்து கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். இந்நிலையில், துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர்.

அணை நீர்மட்டம்

இதற்காக துணை கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக பிரதிநிதிகளான முல்லைப்பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் தேக்கடியில் இருந்து படகுகள் மூலம் அணைக்கு சென்றனர்.

அப்போது அணையின் நீர்மட்டம் 127.55 அடியாக இருந்தது. பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகு பகுதிகள் ஆகியவற்றை இந்த குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் கசிவுநீர் அளவை கணக்கிட்டனர். அது அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப துல்லியமாக இருந்தது. அதன் மூலம், அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர்.

ஆய்வு கூட்டம்

அணையில் உள்ள 13 மதகுகளில் 3, 7 மற்றும் 10-வது மதகுகளை துணை கண்காணிப்பு குழுவினர் இயக்கி சோதனை செய்தனர். அவை சீராக இயங்கின. அணையில் செய்யப்பட வேண்டிய வழக்கமான பராமரிப்பு பணிகள் குறித்து விவாதித்தனர். பின்னர் இந்த குழுவினர் அணையில் இருந்து புறப்பட்டு தேக்கடிக்கு வந்தனர்.

இதையடுத்து குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது, வல்லக்கடவு பாதை சீரமைப்பு, வடகிழக்கு பருவமழை காலத்தில் அணையின் நீர்மட்டம் உயர்வை கண்காணித்தல் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் செய்யப்பட்டன.

வனத்துறை முட்டுக்கட்டை

கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் பேசும்போது, "அணைக்கு வல்லக்கடவு வழியாக செல்லும் பாதையை சீரமைக்க இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அணையின் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கு தளவாட பொருட்கள் கொண்டு செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் பராமரிப்பு பணிக்காக தளவாட பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுதி தர மறுத்து கேரள வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

வழக்கமான பராமரிப்பு பணிகளை கூட மேற்கொள்ள வனத்துறை முட்டுக்கட்டை போடுகிறது. இந்த பிரச்சினையை கண்காணிப்பு குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்றனர்.

காரசார விவாதங்களுடன் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆய்வு குறித்த விவரங்கள் கண்காணிப்பு குழு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று துணை கண்காணிப்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story